உசிலம்பட்டியில் ஷேர் ஆட்டோ மோதி, என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் பலி

உசிலம்பட்டியில் ஷேர் ஆட்டோ மோதியதில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
உசிலம்பட்டியில் ஷேர் ஆட்டோ மோதி, என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் பலி
Published on

உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நல்லிவீரன்பட்டியைச் சேர்ந்தவர் சடையாண்டி மகன் ரூபன் (21). தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். கோவை போத்தனூரைச் சேர்ந்தவர் காதர் மகன் முகமது தவ்பிக்அலி (21). இவரும் அதே கல்லூரியில் படித்து வந்தார். நேற்று இவர்கள் தனது நண்பர் ஒருவரது வீட்டு விஷேச நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சக நண்பர்களுடன் உசிலம்பட்டி வந்தனர்.

விஷேச நிகழ்ச்சி முடிந்து ரூபன், முகமது தவ்பிக்அலி ஆகிய 2 பேர் மட்டும் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மதுரை ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது உசிலம்பட்டியில் இருந்து வந்த ஷேர் ஆட்டோ எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் அவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விஷேச நிகழ்ச்சிக்கு சந்தோஷமாக வந்த கல்லூரி மாணவர்கள் பலியானது உறவினர்களிடையை கடும் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்தில் இறந்த ரூபன், முகமது தவ்பிக்அலி ஆகியோரின் உடலைப் பார்த்து உறவினர்களும் நண்பர்களும் கதறி அழுதனர். இது குறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com