ஊத்துக்கோட்டையில் சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்; சென்னை வாலிபர்கள் 3 பேர் கைது

ஊத்துக்கோட்டையில் சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்த சென்னையை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊத்துக்கோட்டையில் சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்; சென்னை வாலிபர்கள் 3 பேர் கைது
Published on

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் தென்றல். இவரது தாய் மஞ்சுளா கடந்த ஆண்டு இறந்துவிட்டார். அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் சென்னை மூலக்கடை திருவொற்றியூர் மெயின் ரோட்டை சேர்ந்த உறவினர்கள் ரஞ்சித்குமார் (வயது 23), அவரது தம்பி அஜித்குமார் (21), ராகேஷ்குமார் (22) ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள் 3 பேரும் சேர்ந்து ஆந்திர மாநிலத்தில் உள்ள மதுக்கடைகளில் மது குடித்தனர்.

பின்னர் மோட்டார் சைக்கிளில் 3 பேரும் வேகமாக சென்றனர். அப்போது ஊத்துக்கோட்டை அண்ணாசிலை அருகே சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன், போலீஸ் ரஞ்சித், போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த மணிவேல் ஆகியோர் அவர்களை தடுத்து நிறுத்தி வேகமாக செல்லக்கூடாது என்று அறிவுறுத்தினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 3 பேரும் சேர்ந்து மணிவேல் மீது தாக்குதல் நடத்தினர். இதனை தடுத்த சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தனை தொலைத்து விடுவோம் என்று மிரட்டினர்.

இது குறித்து கோவிந்தன் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் போலீசாருடன் அண்ணாசிலை பகுதிக்கு விரைந்து சென்று ரஞ்சித்குமார், அஜித்குமார், ராகேஷ்குமார் ஆகியோரை கைது செய்தார். பின்னர் அவர்களை ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com