வந்தவாசியில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்

வந்தவாசியில் குடிநீர் வழங்காததை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலைமறியல் செய்தனர்.
வந்தவாசியில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்
Published on

வந்தவாசி,

வந்தவாசி நகராட்சி 3-வது வார்டு பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் நேற்று காலை 9.30 மணியளவில் வந்தவாசி நகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வந்தவாசி தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், ரமேஷ் மற்றும் போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பாதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களின் பேச்சுவார்த்தையை ஏற்காத பொதுமக்கள், உரிய அலுவலர் வந்து பதில் அளித்தால் தான் கலைந்து செல்வோம் என கூறினர்.

நேற்று விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு சென்று இருந்த நகராட்சி ஆணையாளர் எஸ்.பார்த்தசாரதியிடம் செல்போன் மூலம் போலீசார் தொடர்பு கொண்டு பேசினர்.

அப்போது குடிநீர் வழங்க உரிய ஏற்பாடு செய்வதாக அவர் உறுதி அளித்ததை, போலீசார் பொதுமக்களிடம் கூறினர். இதனை ஏற்று பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சாலைமறியல் காரணமாக அப்பகுதியில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com