

வேதாரண்யம்:
வெயில் சுட்டெரிப்பதால் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இலக்கை எட்ட தொழிலாளர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
9 ஆயிரம் ஏக்கர்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு பகுதியில் சுமார் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தப்படியாக உப்பு உற்பத்தியில் வேதாரண்யம் 2-ம் இடம் வகிக்கிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
உப்பு உற்பத்தி
இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி தொடங்கப்பட்ட நிலையில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பருவம்தவறி இருமுறை மழை பெய்தது. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
தற்பொழுது வேதாரண்யம் பகுதியில் வெயில் சுட்டெரித்து வருவதால் உப்பு உற்பத்தி பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 9 ஆயிரம் ஏக்கரில் முழுவீச்சில் உப்பு உற்பத்தி பணியை உற்பத்தியாளர்கள் தொடங்கி உள்ளனர். உப்பு உற்பத்தி பணியில் இரவு, பகலாக தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இலக்கை எட்ட தீவிரம்
வேதாரண்யத்தில் ஆண்டுதோறும் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படும். இந்த ஆண்டு உப்பு உற்பத்தி தொடங்கிய போது மழையால் உற்பத்தி பணி பாதிக்கப்பட்ட நிலையில் இலக்கை எட்ட உப்பள தொழிலாளர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.