விருதுநகரில் பட்டாசு வெடித்ததில் ஓட்டலில் தீ விபத்து

விருதுநகரில் பட்டாசு வெடித்த போது ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது.
விருதுநகரில் பட்டாசு வெடித்ததில் ஓட்டலில் தீ விபத்து
Published on

விருதுநகர்,

விருதுநகர் ரெயில்வே பீடர் ரோட்டில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். தீபாவளி தினத்தன்று இரவு அப்பகுதியில் சிலர் ராக்கெட் வகை பட்டாசுகளை வெடித்துள்ளனர். இதில் ஒரு பட்டாசு பறந்து சென்று ஓட்டலின் பின்பகுதியில் விழுந்தது. இதனால் அங்கு தீப் பிடித்தது. பின்னர் தீ மள மள வென பரவியது. தகவல் அறிந்த விருதுநகர் தீயணைப்பு அதிகாரி குமரேசன் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதனால் ஓட்டலின் பின் பகுதி சேதம் அடைந்தது. இந்த தீ விபத்தால் நகர் பகுதியில் 1 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

இதே போல் விருதுநகர் வாடியான் தெருவில் சிலர் பட்டாசு வெடித்ததில் வேலுச்சாமி என்பவருக்கு சொந்தமான இடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த பழைய அட்டை, காகிதத்தில் தீப்பிடித்தது. இதனால் அட்டைகள் எரிந்து நாசமானது.

இதே போல் விருதுநகர் ஆனைக்குழாய் தெருவில் உள்ள ஆதீஸ்வரி என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கிடங்கிலும், சிவன் கோவில் தெருவில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் இருந்த பழைய பொருட்களிலும் பட்டாசு வெடித்து தீப்பிடித்தது. தகவல் அறிந்த விருதுநகர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com