

பூந்தமல்லி,
சென்னை வளசரவாக்கம், சேனாதிபதி தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது 42). குழந்தைகள் நல டாக்டரான இவர், விருகம்பாக்கம் சாலிகிராமம், எஸ்.பி.ஐ. காலனி 2-வது தெருவில் சொந்தமாக கிளனிக் நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு கிளனிக்கில் குழந்தைகளுக்கு மருத்துவம் பார்த்து முடிந்ததும் டாக்டர் கார்த்திகேயன், வீட்டுக்கு செல்வதற்காக கிளினீக்கை பூட்டிவிட்டு காரில் ஏற முயன்றார்.
அப்போது அங்கு வந்த 3 பேர், திடீரென டாக்டர் கார்த்திகேயனை அடித்து, உதைத்தனர். பின்னர் கத்தியை காட்டிமிரட்டி, அவரது கை, கால்களை கயிற்றால் கட்டி அவரது காரிலேயே கடத்திச்செல்ல முயன்றனர்.
இதை பார்த்த அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டனர். சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் திரண்டு வந்தனர். டாக்டர் கார்த்திகேயனும் தன்னை கடத்த முயன்ற மர்ம நபர்களுடன் போராடினார். பொதுமக்கள் ஒன்று திரண்டதால் பயந்துபோன கடத்தல் ஆசாமிகள், அங்கிருந்து தப்பி ஓடினர்.
அவர்களில் ஒருவரை மட்டும் பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர். மற்ற 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்துவந்த விருகம்பாக்கம் போலீசாரிடம், பிடிபட்ட நபரை ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.