வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் ஆய்வு - தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்

குமரி மாவட்டத்தில் அமைய உள்ள வாக்கு எண்ணும் மையங்களை கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆய்வு செய்தார். மேலும் அவர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினார்.
வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் ஆய்வு - தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்
Published on

நாகர்கோவில்,

தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளுக்கு வருகிற 27-ந் தேதி மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் குமரி மாவட்டத்தில் உள்ள 95 பஞ்சாயத்துகள், 984 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 11 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள், 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 111 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் இந்த தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கியது. 16-ந் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற உள்ளது. 17-ந் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் 19-ந் தேதி ஆகும். 27-ந் தேதி மற்றும் 30-ந் தேதி ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். இதில் பதிவாகும் வாக்குகள் வருகிற ஜனவரி மாதம் 2-ந் தேதி எண்ணப்படும்.

இந்த தேர்தலை நடத்துவதற்கு 20 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 147 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்தநிலையில் நேற்று குமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் ஏற்றக்கோடு அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியிலும், முன்சிறை ஊராட்சி ஒன்றியம் வாவறை புனித பிரான்சிஸ் மேல்நிலைப்பள்ளியிலும், மேல்புறம் ஊராட்சி ஒன்றியம் திருத்துவபுரம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி உள்பட 9 இடங்களில் அமைக்கப்பட உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களை பார்வையிட்டு அந்தந்த ஒன்றியங்களின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் பத்மநாபபுரம் உதவி கலெக்டர் சரண்யா அரி, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) பிச்சை, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சையத் சுலைமான், வட்டார வளர்ச்சி அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com