

பெரம்பூர்,
வியாசர்பாடி சாமந்திப்பூ காலனியை சேர்ந்தவர் காளி. இவருடைய மகன் முரளி (என்ற) பாக்சர் முரளி (வயது 34). பிரபல ரவுடி ஆன இவர் வியாசர்பாடியை சேர்ந்த மற்றொரு பிரபல ரவுடி நகேந்திரனின் கூட்டாளி ஆவர்.
முரளி மீது வியாசர்பாடி, கொடுங்கையூர், எம்.கே.பி.நகர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி என பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் முரளி 3 முறை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர் ஆவார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வியாசர்பாடி பகுதியில் உள்ள சாலையில் முரளி கத்தியுடன் நின்றுகொண்டு வழிப்பறியில் ஈடுபடுவதாக வியாசர்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் முரளியை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்த கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் வழிப்பறியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்து முரளியை கைது செய்த போலீசார், அவரை புழல் சிறையில் அடைத்தனர்.