

ஏற்காடு,
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், படகு இல்லம், கிளியூர் நீர்வீழ்ச்சி, சேர்வராயன் மலைக்கோவில் உள்பட பல இடங்கள் உள்ளன.
இந்தநிலையில் விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர். காலை முதலே வானம் மேகமூட்டமாக இருந்து. இதனால் இதமான சீதோஷ்ணநிலையில் சுற்றுலா பயணிகள் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்தனர். படகு இல்லத்திற்கு சென்று படகுசவாரி செய்து மகிழ்ந்தனர். இளைஞர்கள், பெண்கள் தங்கள் செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
குளிர்ந்த காற்று
மாலை 3 மணி அளவில் கனமழை பெய்தது. இந்த மழையால் சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே உள்ள பகுதிகளில் ஒதுங்கி நின்றனர். சுமார் 1 மணி நேரம் பெய்த பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் குளிர்ந்த காற்று வீசியதால் ஆங்காங்கே இருந்த சாலையோர கடைகளில் மிளகாய் பஜ்ஜி, சமோசா விற்பனையும் அமோகமாக நடைபெற்றது.
வாகன ஓட்டிகள் தங்களின் வாகனங்களில் உள்ள முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.