காப்பகத்தில் சேர்க்கப்பட்ட பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பிறந்த குழந்தையை மருத்துவமனையில் விட்டு சென்ற பெண், காப்பகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் தேனி அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காப்பகத்தில் சேர்க்கப்பட்ட பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

தேனி,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஆசாரிபட்டியை சேர்ந்த குருசாமி மகள் தனலட்சுமி (வயது 33). இவருக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. 10 வயதில் மகன் இருக்கிறான். திருமணமான சில மாதங்களில் கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து விட்டார்.

இந்தநிலையில், அதே ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது. அதில் கர்ப்பமான தனலட்சுமி பிரசவத்துக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 1 மாதங்களுக்கு முன்பு சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில நாட்களிலேயே, அதனை மருத்துவமனையில் அவர் விட்டு சென்று விட்டார். அந்த குழந்தை, தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் சேர்த்து பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில், தனலட்சுமி தனது மகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டார். அவருக்கு அறிவுரைகள் கூறி, குழந்தையை அவரிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையே அதே ஊரை சேர்ந்த வாலிபர் தான் தனது கர்ப்பத்துக்கு காரணம் என்றும், தன்னை ஏமாற்றிய அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து குழந்தையுடன் அவரை பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக சமூக நலத்துறைக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சமூக நலத்துறை அதிகாரிகள் மூலமாக தனலட்சுமியும், அவருடைய குழந்தையும் தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள ஒரு காப்பகத்தில் கடந்த 1-ந்தேதி சேர்த்து விடப்பட்டனர்.

நேற்று முன்தினம் குளிக்க செல்வதாக கூறி சென்ற தனலட்சுமி, அங்குள்ள ஒரு குளியல் அறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாயை இழந்து தவித்த பெண் குழந்தை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் மீட்கப்பட்டு, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com