பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் வரத்து உயர்வு: சென்னைக்கு கூடுதல் குடிநீர் வினியோகிக்க திட்டம்

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் வரத்து அதிகரிக்கப்பட்ட நிலையில், வினாடிக்கு 581 கன அடியாக தண்ணீர் வருகிறது. இதனால் சென்னைக்கு கூடுதல் குடிநீர் வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் வரத்து உயர்வு: சென்னைக்கு கூடுதல் குடிநீர் வினியோகிக்க திட்டம்
Published on

பூண்டி ஏரி

சென்னை நகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து கடந்த மாதம் 16-ந் தேதி முதல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.முதலில் விநாடிக்கு 150 கன அடியாக வந்த நீர், படிப்படியாக அதிகரித்து நேற்று காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 581 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3,231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை நீர்மட்டம் 23.57 அடியாக பதிவாகியது. 652 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 155 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அதே போல் சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 9 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.கடந்த 16-ந் தேதி ஏரியில் வெறும் 166 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த மாதம் 16-ந்

தேதி முதல் நேற்று காலை வரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 907 மில்லியன் கன அடி தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது.

கூடுதல் குடிநீர் வினியோகம்

கிருஷ்ணா நதிநீர் பூண்டி ஏரிக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில், அங்கிருந்து சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறக்கப்படும் தண்ணீர் மற்றும் அந்த ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் ஓரளவு தண்ணீர் ஏரிகளுக்கு வருகிறது.தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளிலும் 6 ஆயிரத்து 912 மில்லியன் லிட்டர்( 6.9.டி.எம்.சி) இருப்பு உள்ளது. எனவே கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், குடிநீருக்காக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது என்பதற்காக கூடுதல் குடிநீர் வினியோகம்

செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தற்போது சென்னை மாநகர பகுதிகளுக்கு 85 கோடி லிட்டர் (850 மில்லியன் லிட்டர்) குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை 900 மில்லியன் லிட்டராக அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பான தகவல்கள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசீலனையில் உள்ளது. இதுகுறித்து முறையான அறிவிப்பை அரசு விரைவில் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக நீர்வளத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com