கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

குளிர் கால சீசனை அனுபவிக்க கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
Published on

கொடைக்கானல்:

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. குளிர் கால சீசன் தொடங்கி உள்ள நிலையில், வாரவிடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. குறிப்பாக மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், பில்லர்ராக், குணா குகை, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கொடைக்கானலில் நேற்று காலையில் லேசான சாரல் மழை பெய்தது. இதைத்தொடர்ந்து மிதமான வெப்பம் நிலவியது. பின்னர் குளிர் என சீதோஷ்ண நிலை மாறி மாறி இருந்தது. சில இடங்களில் பனி மூட்டம் காணப்பட்டது. இதனை சுற்றுலா பயணிகள் ரசித்து அனுபவித்தனர். சிலர் தங்கள் செல்போனில் படம் பிடித்தனர்.

மேலும் அவர்கள் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏரியை சுற்றி சைக்கிள் சவாரி மற்றும் குதிரை சவாரி செய்தனர். மழையின் காரணமாக மலைப்பகுதியில் ஆங்காங்கே புதிதாக தோன்றிய நீர்வீழ்ச்சிகள் முன்பு சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com