மத்திய- மாநில அரசுகள் உறவில் சீர்கேட்டால் சோவியத் யூனியன் போல இந்திய மாநிலங்கள் சிதறலாம்; சிவசேனா சொல்கிறது

மத்திய- மாநில அரசுகளின் உறவின் சீர்கேடு காரணமாக சோவியத் யூனியன் போல் மாநிலங்கள் சிதறுண்டுபோகலாம் என்று சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது.
மத்திய- மாநில அரசுகள் உறவில் சீர்கேட்டால் சோவியத் யூனியன் போல இந்திய மாநிலங்கள் சிதறலாம்; சிவசேனா சொல்கிறது
Published on

சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னா' தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளதாவது:-

அரசை கவிழ்க்க பிரதமர் சிறப்பு கவனம்

பா.ஜனதா பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய் வர்க்கியா சமீபத்தில் பரபரப்பான பேட்டி அளித்தார். அதில், மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பிரதமர் மோடி சிறப்பு கவனம் செலுத்தினார் என விஜய் வர்க்கியா தெரிவித்தார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசை கவிழ்க்க சிறப்பு கவனத்தை பிரதமர் எடுத்து கொண்டாரா? நாட்டுக்கு உரித்தானவர் பிரதமர். கூட்டாட்சி அடிப்படையில் இந்த தேசம் இருக்கிறது. மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி இல்லாத அரசுகள் கூட நாட்டின் நலன்பற்றிதான் சிந்திக்கின்றன. ஆனால், இந்த செயலால் இந்த உணர்வு கொல்லப்பட்டு வருகிறது.

மக்கள் விலை கொடுக்கிறார்கள்

முதல்-மந்திரியும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியை மேற்கு வங்கத்தின் ஆட்சி அதிகாரத்திலிருந்து இறக்க மத்திய அரசு முயன்று வருகிறது. ஜனநாயகத்தில் அரசியல் தோல்வி என்பது சாதாரணமானது. ஆனால், மத்திய அரசு அந்த தோல்வியை தாங்காமல் மம்தா அரசை வெளியேற்ற முயல்வது வேதனையானது.

மிகப்பெரிய பேரணிகள், ஊர்வலங்கள் உள்துறை அமைச்சர் தலைமையில் இந்நாட்டில் நடக்கின்றன. அதேநேரத்தில் மராட்டியம் போன்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க இரவுநேர ஊரடங்கும் அவசியம். ஆட்சியாளர்கள் விதிகளை மீறினால், மக்கள்தான் விலை கொடுக்கிறார்கள்.

மாநிலங்கள் சிதறும்

நடிகை கங்கனா ரணாவத்தையும், பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமியையும் பாதுகாக்க மத்திய அரசு முயல்கிறது. சீனாவுடனான எல்லை பிரச்சினையை திசை திருப்ப தேசியவாதம் முன்வைக்கப்பட்டது. சீனப் பொருட்களை வாங்க வேண்டாம் என கூறும் வேளையில் சீன முதலீடு ஊக்குவிக்கப்பட்டது.

அரசியல் ஆதாயத்துக்காக மக்களைத் துன்புறுத்துகிறோம் என்று மத்திய அரசு உணராவிட்டால், சோவியத் யூனியன் போல், மாநிலங்கள் சிதறுண்டு போவதற்கு நீண்டகாலம் ஆகாது. 2020-ம் ஆண்டு என்பது மத்திய அரசின் செயல்திறன், நம்பகத்தன்மை மீது கேள்வி எழுப்பி இருக்கிறது.

பல்வேறு விவகாரங்களிலும் உச்ச நீதிமன்றம் தனது கடமையை மறந்துவிட்டது.

வெறும் கையுடன் மக்கள்

உலகமே கொரோனாவில் பாதிப்படைந்தது. அமெரிக்க அரசு, பொருளாதாரப் பிரச்சினையில் சிக்கிய தனது மக்களுக்கு சிறந்த நிதியுதவியை வழங்கியது. இதனால் மாதந்தோறும் ரூ.65 ஆயிரம் பணம் அமெரிக்க மக்களின் வங்கிக்கணக்கில் செல்லும். இதேபோன்று பிரேசில் நாட்டிலும், ஐரோப்பிய நாடுகளிலும் நடந்தன. ஆனால், இந்திய மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டாகியும் வெறும் கையுடன்தான் இருக்கிறார்கள்.

புதிதாகக் கட்டப்படும் நாடாளுமன்றக் கட்டிடம் எந்த சூழலையும் மாற்றிவிடாது. ரூ.1000 கோடி செலவு செய்து கட்டப்படும் புதிய நாடாளுமன்றத்துக்கான பணத்தை மக்களின் சுகாதாரத்தில் முதலீடு செய்ய வேண்டும். மக்கள் இதை பிரதமர் மோடியிடம் வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com