

தொட்டியம், ஏப்.6-
தொட்டியம் அருகே உள்ள முள்ளிப்பாடி கிராமத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஏற்பட்ட தகராறில் வேம்பு என்பவர் காயம் அடைந்தார். அதன்பின் அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் தொட்டியத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. சீனிவாசநல்லூர் பகுதியில் வந்தபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள ராஜா என்பவரது வீட்டின் சுவற்றில் மோதியது. இதில் சுவர் இடிந்து விழுந்தது. மேலும் ஆம்புலன்ஸ் டிரைவர் முசிறி தாலுகா பேரூர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார், தொட்டியம் தாலுகா கோடியாம்பாளையத்தை சேர்ந்த டெக்னீசியன் குருநாதன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.