லெட்சுமாங்குடி கடைவீதி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஒரு வழி பாதை அமைத்து தர வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

லெட்சுமாங்குடி கடைவீதி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தவிர்க்க ஒரு வழி பாதை அமைத்து தர வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.
லெட்சுமாங்குடி கடைவீதி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஒரு வழி பாதை அமைத்து தர வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
Published on

கூத்தாநல்லூர்,

கூத்தாநல்லூரில் உள்ள லெட்சுமாங்குடி கடைவீதி சாலை 80 ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் குறுகலான சாலையாகவே இருந்து வருகிறது. இந்த சாலை திருவாரூர்-மன்னார்குடி வழித்தடத்தில் உள்ளது. இந்த வழித்தடத்தில் தினமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி-கல்லூரி வாகனங்கள், கார், வேன், ஆட்டோ, லாரி, டிராக்டர், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலகம், தாசில்தார் அலுவலகம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு இந்த கடைவீதி சாலையை கடந்து தான் சென்று வர வேண்டும்.

போக்குவரத்து நெரிசல்

லெட்சுமாங்குடி கடைவீதி சாலை மிகவும் குறுகலாக இருந்து வருவதால், எதிர் எதிரே வரும் வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் திணறி வருகின்றன. அப்போது வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் போகும் போது வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஸ்தம்பித்து வரிசையாக பலமணி நேரம் நின்று விடுகின்றது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்போது வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவர்கள், பஸ்சில் பயணம் செல்லும் பயணிகள், கடைவீதி சாலையில் சென்று வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

ஒரு வழி பாதை

மேலும் அவசர நோயாளிகளை ஏற்றி செல்லும் 108 வாகனங்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் வாகனங்கள் கூட போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க லெட்சுமாங்குடி கடைவீதி சாலையை ஒரு வழி பாதையாக அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com