காரைக்குடி பகுதியில் இறைச்சி-மீன் கடைகளில் ஆய்வு; கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

காரைக்குடி பகுதியில் இயங்கி வரும் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கெட்டுப்போன 10 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
காரைக்குடி பகுதியில் இறைச்சி-மீன் கடைகளில் ஆய்வு; கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
Published on

காரைக்குடி,

காரைக்குடி பகுதியில் 60-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகளும், 80-க்கும் மேற்பட்ட மீன் கடைகளும் இயங்கி வருகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ உணவு விற்பனை மும்முரமாக இருப்பது வழக்கம். தற்போது ஊரடங்கால் வீடுகளில் முடங்கியுள்ள மக்கள் நேற்று இறைச்சி மற்றும் மீன் கடைகளில் குவித்தனர். மேலும் கடைகளில் தரமான இறைச்சி மற்றும் மீன்கள் விற்கப்படுகிறதா என அவ்வப்போது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காரைக்குடி நகராட்சித்துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் சோதனை நடத்தி கெட்டுப்போன சுமார் 1 லட்சம் மதிப்புள்ள இறைச்சி மற்றும் மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் கெட்டுப்போன இறைச்சி மற்றும் மீன்களை விற்பனை செய்த கடையின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதித்தனர். மேலும் வாரந்தோறும் சோதனை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் ஜெயராமன் பாண்டியன் அறிவுரையின் பேரில், காரைக்குடி உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் வேல்முருகன் தலைமையில், அதிகாரிகள் நகரில் உள்ள இறைச்சி மற்றும் மீன்கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர். மேலும் சில கடைகளில் மக்கள் நெருக்கமாக நின்றதால் அவர்களை சமூக இடைவெளி விட்டு நிற்கும்படியும், கடை விற்பனையாளர்களை முக கவசம் அணிந்து விற்பனை செய்யும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து சில கடைகளில் கெட்டுப்போன 10 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். பின்னர் இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் வேல்முருகன் கூறியதாவது:-

இறைச்சி கடை உரிமையாளர்கள், மக்களுக்கு கெட்டுப்போன இறைச்சி மற்றும் மீன்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுப்பதோடு உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி கடை உரிமையாளர்களை சிறையில் அடைக்க நேரும். எனவே தரமான இறைச்சி மற்றும் மீன்களை விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com