ஒருங்கிணைந்த நாடார் சங்கங்கள் ஆர்ப்பாட்டம் சென்னையில் நடந்தது

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து ஒருங்கிணைந்த நாடார் சங்கங்கள் சார்பில் நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒருங்கிணைந்த நாடார் சங்கங்கள் ஆர்ப்பாட்டம் சென்னையில் நடந்தது
Published on

சென்னை,

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் ஒருங்கிணைந்த நாடார் சங்கங்கள் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய நாடார்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் த.பத்மநாபன் நாடார் தலைமை தாங்கினார். சென்னைவாழ் நாடார் சங்க தலைவர் பி.சின்னமணி நாடார், நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க பொருளாளர் மயிலை எம்.மாரித்தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தட்சணமாற நாடார் சங்க தலைவர் டி.ஆர்.சபாபதி நாடார், மகாஜன சங்க பொதுச்செயலாளர் ஜி.கரிக்கோல்ராஜ் நாடார், தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்க நிறுவனத்தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால், தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன், தலைமை நிலையசெயலாளர் சிவக்குமார், மாநில செய்தி தொடர்பாளர் சந்தானம், பாரதிய கல்சூரி ஜெய்ஸ்வால் நாடார் சங்க செயலாளர் தங்கம் ஆர்.செல்வராஜ், சென்னைவாழ் நாடார் சங்க பொதுச்செயலாளர் தங்கமுத்து நாடார், நாடார் மக்கள் சக்தி அமைப்பாளர் ஏ.ஹரிநாடார், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் எச்.ஸ்டீபன், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ் நாடார், சென்னை நாடார் சங்க செயலாளர் விஜயகுமார், மத்திய சென்னை நாடார் இளைஞர் பேரவை தலைவர் மாரிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில் துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதையடுத்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

* தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்தியபோது மக்களை கண்டுகொள்ளாததும், போராட்டம் நடத்திய மக்களை அழைத்து பேசாததும் தான் துப்பாக்கி சூட்டுக்கும், உயிர்பலிக்கும் முதற்காரணம் என்று தமிழக அரசையும், மத்திய அரசையும் கண்டிக்கிறோம்.

* சுயலாபத்துக்காக அரசுகள் இயங்கக்கூடாது. மக்கள் நலனே அரசின் நலம். எனவே பொதுமக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை உடனே நிரந்தரமாக மூடிட சட்டமன்றத்தில் அரசாணை பிறப்பிக்க தமிழக அரசை கோருகிறோம் என்பது உள்பட 7 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.

இதுகுறித்து இந்திய நாடார்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் த.பத்மநாபன் நாடார் கூறுகையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். பலியானவர்களுக்கு எவ்வளவு கோடி பணம் கொடுத்தாலும், போதாது. வனவிலங்குகளை கூட சுடுவதற்கு தடை இருக்கிறது. உரிமைக்கோரி போராடிய மக்களை சுடுவது என்பது காட்டுமிராண்டித்தனத்தை விட மிக மோசமான செயல் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com