

பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இ-பதிவு இல்லாமல் வந்த வாகனங்களை திருப்பி அனுப்பினர்.
இ-பதிவு கட்டாயம்
கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்படி மருந்து கடைகள், பால் வினியோகம் தவிர மற்ற அனைத்து கடைகளும் காலை 10 மணிக்குள் அடைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் மாவட்டங் களுக்கு உள்ளேயும், வெளியேயும் செல்வதற்கு இ-பதிவு முறை கட்டாயம் ஆகும்.
திருப்பி அனுப்பினர்
இதை தொடர்ந்து பொள்ளாச்சி, வால்பாறை சரக பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அத்தியாவசிய தேவைக்கு தவிர தேவை யில்லாமல் வந்த வாகன ஓட்டிகளை திருப்பி அனுப்பினர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
மாவட்டத்திற்குள் செல்வதற்கும், வெளிமாவட்டங்களுக்கு செல்வதற்கு இ-பதிவு நடைமுறைக்கு வந்து உள்ளது. சோதனை சாவடிகளில் உள்ள போலீசார் சோதனை செய்யும்போது, இ-பதிவு இல்லாமல் வரும் வாகனங்களை அனுமதிப்பதில்லை.
வழக்குப்பதிவு செய்யப்படும்
பொள்ளாச்சி போலீஸ் சரகத்தில் வடக்கிபாளையம் பிரிவு, எஸ்.நாகூர், அந்தியூர், காட்டம்பட்டி, கோபாலபுரம், நடுப்புணி, ஜமீன்காளியாபுரம், பெரும்பதி, வடக்குக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று வால்பாறை சரகத்தில் ரெட்டியாரூர், வஞ்சியா புரம், மளுக்குபாறை, மீனாட்சிபுரம், கோவிந்தாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும் வாகனங்கள் தவிர மற்ற எந்த வாகனங்களுக்கும் அனுமதிக்கபடாது. மேலும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள், ஊழியர்கள் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.
மேலும் எந்த காரணத்திற்காக செல்கிறோம் என்பது குறித்த விவரங்களை பணியில் உள்ள போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும். ஊரடங்கு விதிகளை மீறும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.
பொதுமக்கள் தேவை யில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.