விழுப்புரத்தில் கிராம உதவியாளர் பணிக்கான நேர்காணல்

விழுப்புரத்தில் கிராம உதவியாளர் பணிக்கான நேர்காணல் நடைபெற்றது.
விழுப்புரத்தில் கிராம உதவியாளர் பணிக்கான நேர்காணல்
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட வருவாய்த்துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர்கள் பணியிடத்திற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவும், நேரடியாகவும் விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் நடைபெற்று வருகிறது.

இதில் விழுப்புரம் தாலுகாவுக்குட்பட்ட சோழாம்பூண்டி, பள்ளியந்தூர் உள்ளிட்ட 6 கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர்கள் பணிக்கு 460 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான நேர்காணல் நேற்று தொடங்கியது.

முதல்நாளான நேற்று 150 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. பின்னர் அவர்களுக்கு எழுத, படிக்க தெரிகிறதா? என்று தேர்வு நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, கிராமத்தில் நடைபெறும் முக்கிய தகவல்களை உடனுக்குடன் உயர் அதிகாரிகளிடம் நேரில் வந்து தெரிவிக்க, சைக்கிள் ஓட்ட தெரிகிறதா? என்பதை கண்டறிவதற்காக ஒவ்வொருவரையும் தாலுகா அலுவலக வளாகத்தில் சைக்கிள் ஓட்ட வைத்து நேர்காணல் செய்தனர்.

இந்த நேர்காணலை தாசில்தார் சுந்தர்ராஜன் தலைமையில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் வேல்முருகன், கோட்ட கலால் அலுவலர் பார்த்திபன் மற்றும் மண்டல துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோர் நடத்தினார்கள். நாளையுடன்(வியாழக்கிழமை) நேர்காணல் முடிகிறது. இதன்பிறகு அரசின் விதிமுறைப்படி பணி ஆணை வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com