முதியவரை மிரட்டி நகை பறித்த 2 பேர் கைது

போலீஸ்காரர்கள் என்று கூறி முதியவரை மிரட்டி 2 பவுன் நகையை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
முதியவரை மிரட்டி நகை பறித்த 2 பேர் கைது
Published on

அம்பத்தூர்,

அம்பத்தூரை அடுத்த அத்திப்பட்டு அப்துல்கலாம் நகர், முனுசாமி தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(வயது 70). இவர், சென்னை தி.நகரில் உள்ள ஒரு கடையில் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர், வேலைக்கு செல்வதற்காக அத்திப்பட்டு பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்றார். அப்போது அங்கு ஒரு ஆட்டோவில் வந்து இறங்கிய 2 பேர், நாங்கள் இருவரும் போலீஸ்காரர்கள். உங்களிடம் விசாரிக்க வேண்டியது உள்ளது என்று கூறி முதியவர் ராமகிருஷ்ணனை மிரட்டி வலுக்கட்டாயமாக தாங்கள் வந்த ஆட்டோவில் ஏற்றி அழைத்துச்சென்றனர்.

வானகரம் செல்லும் சாலையில் ஆட்டோவை நிறுத்திய அவர்கள், முதியவர் ராமகிருஷ்ணன் அணிந்து இருந்த 2 பவுன் மோதிரம் மற்றும் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு அவரை மிரட்டி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இது குறித்து அவர், அம்பத்தூர் எஸ்டேட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்தநிலையில் போலீஸ்காரர்கள் என்று கூறி முதியவரை மிரட்டி நகை பறிப்பில் ஈடுபட்டதாக ஆற்காட்டை சேர்ந்த் மெகபூப்பாஷா(39), திருவண்ணாமலையைச் சேர்ந்த கதிர்(40) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைதான 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com