‘அரிப்பு’ என்பது ஆரோக்கியமான எச்சரிக்கை

அரிப்பு என்பது நம் உடல் எந்திரத்தில் இயங்கும் ஒரு அலாரம். உடம்புக்குள் வேண்டாத பொருள் ஒன்று நுழைந்துவிட்டால் நமக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் அறிகுறிதான் அரிப்பு.
‘அரிப்பு’ என்பது ஆரோக்கியமான எச்சரிக்கை
Published on

ரிப்பு என்பது நம் உடல் எந்திரத்தில் இயங்கும் ஒரு அலாரம். உடம்புக்குள் வேண்டாத பொருள் ஒன்று நுழைந்துவிட்டால் நமக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் அறிகுறிதான் அரிப்பு. இது சில நேரம் இதமாகவும், இன்பமாகவும் இருக்கும். அதுவே பல நேரம் எரிச்சலையும், வெறுப்பையும் ஏற்படுத்துவதாக மாறிவிடும். உடலியல் ரீதியில் சொன்னால் அரிப்பு என்பது ஒவ்வாமையின் வெளிப்பாடு. இதை செயல்படுத்துவது நம் தோலில் உள்ள மாஸ்ட் செல்கள்.

அரிப்பு ஏற்படுவதற்கு அடிப்படை காரணம், பிடிக்காத பொருளுக்கு ரத்தத்தில் உருவாகும் எதிர்ப்பாற்றல் புரதம்தான். இதை இம்யூனோகுளோபுலின் ஈ என்பார்கள். இந்த புரதத்தை ரத்த செல்கள் உருவாக்குகின்றன. பிடிக்காத பொருள் முதல்முறையாக உடம்புக்குள் நுழையும்போது, இந்த புரதம் உருவாகி ரத்தத்தில் காத்திருக்கும். மீண்டும் அதே ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழையும்போது, இந்த புரதம் ஒவ்வாமை பொருளுடன் சேர்ந்து மாஸ்ட் செல்களைத் தூண்டும். இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் ஹிஸ்டமின், லுயூக் கோட்ரின் எனும் வேதிப்பொருட்களை வெளியேற்றும். இவை ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்து அங்குள்ள நரம்பு முனைகளை தாக்கும். அதன் விளைவால்தான் அரிப்பு, தடிப்பு, தோல் சிவப்பது போன்றவை ஏற்படுகின்றன. இந்த அரிப்புக்கு காரணம் என்ன என்பதை கண்டறிந்து வைத்தியம் செய்தால் சரியாகி விடும்.

நம் உடலில் அரிக்க வேண்டும் என்ற தகவலை மூளைக்கு எடுத்துச் செல்வதும், மூளையில் இருந்து சொறிய வேண்டும் என்ற கட்டளையை விரல்களுக்கு எடுத்து வருவதும் ஒரே நரம்பின் வேலைதான். அரிப்பு ஏற்படுவதற்கு காரணங்கள் அநேகம். என்றாலும், இவற்றை இரண்டே இரண்டு பிரிவுகளில் அடக்கி வைத்திருக்கிறது, மருத்துவம். உடலின் வெளியிலிருந்து வருவது ஒரு வகை. உடலுக்குள்ளேயே இருப்பது அடுத்த வகை.

வெளியிலிருந்து வரும் எதிராளிகளில் முன்னிலை வகிப்பது செயற்கை அழகு சாதனப் பொருள்கள். சோப்பு, நறுமணப் பொருட்கள், குங்குமம், தலைச்சாயம், உதட்டுச்சாயம், நகப்பூச்சு, முகப்பவுடர், கிரீம் போன்றவை உடலுக்கு ஒத்துக்கொள்ளாவிட்டால் அரிப்பை ஏற்படுத்தும். சிலருக்கு கம்பளி, டெர்லின், நைலான், விலங்குகளின் தோல் போன்ற ஆடைகளை அணிந்தால் உடல் அரிக்க ஆரம்பித்துவிடும்.

உடலில் இருக்கும் எந்தவொரு நோய்த் தொற்றும் அரிப்பை உண்டாக்க வாய்ப்புண்டு. தவிர, நீரிழிவு நோய், ரத்தச்சோகை, மஞ்சள் காமாலை, சிறுநீரக கோளாறு, தைராய்டு பிரச்சினை, பித்தப்பை பிரச்சினை, மல்ட்டிபிள் ஸ்கிலிரோசிஸ் எனும் மூளை நரம்பு பிரச்சினை, பரம்பரை போன்றவையும் அரிப்புக்கு காரணமாக இருக்கலாம். நாம் சாப்பிட்ட உணவு ஒத்துக்கொள்ளாமல் அரிப்பை உண்டாக்குவதும் உண்டு.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com