

ஹாசன்,
ஜனதாதளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்களை நேற்று இரவு குமாரசாமி சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
கர்நாடகத்தில் காங்கிரஸ்- ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் மந்திரி பதவி விவகாரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால், கூட்டணி ஆட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த குழப்பத்தை பயன் படுத்தி ஆபரேசன் தாமரை மூலம் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜனதா நடவடிக்கை எடுத்து வருவதாக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இதற்கிடையே 18 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாகவும், அதன் பின்னர் அவர்கள் மும்பை சென்று தங்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் கூட்டணி ஆட்சியை காப்பாற்ற எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க ஹாசனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது.
இந்த கூட்டம் ஹாசன் அருகே உள்ள ஒய்சாலா என்ற தனியார் தங்கும் விடுதியில் நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்காக அந்த தங்கும் விடுதியில் 40 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் நேற்று மாலையே தங்கும் விடுதிக்கு வரத் தொடங்கினர்.
அவர்களுடன் நேற்று இரவு முதல்-மந்திரி குமாரசாமி சந்தித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அப்போது குமாரசாமி, எம்.எல்.ஏ.க்களுடன் என்ன விவாதித்தார் என்பது தெரியவில்லை. இதையொட்டி அந்த தனியார் தங்கும் விடுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.