திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி: பெண்களிடம் நகை, பணம் பறித்த மோசடி மன்னன் சிறையில் அடைப்பு

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பெண்களிடம் நகை, பணம் பறித்த மோசடி மன்னனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி: பெண்களிடம் நகை, பணம் பறித்த மோசடி மன்னன் சிறையில் அடைப்பு
Published on

பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் அஜ்மல் நிசார் (வயது 30). கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கணவரால் கைவிடப்பட்ட இளம்பெண்ணை தொடர்பு கொண்டு அடிக்கடி வீடியோ காலில் பேசினார். அதில் இருவருக்கும் நட்பு ஏற்பட்டது.

அப்போது அஜ்மல் நிசார், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறினார். அதை உண்மை என்று நம்பி அந்த பெண்ணும் அவருடன் நெருங்கி பழகியதாக தெரிகிறது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய அஜ்மல் நிசார், தனக்கு கடன் பிரச்சினை உள்ளது. அதை தீர்த்துவிட்டால் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறினார்.

இதையடுத்து அந்த பெண், தனது பெற்றோருக்கு தெரியாமல் 15 பவுன் நகை, ரூ.3 லட்சம் ஆகியவற்றை கொடுத்தார். பணம், நகையை பெற்றுக்கொண்ட அஜ்மல் நிசார், அதன் பிறகு அந்த பெண்ணிடம் பேசுவதையும், பழகுவதையும் நிறுத்திக்கொண்டார். அந்த பெண் தொடர்பு கொண்டாலும் அவர் பேசாமல் தவிர்த்தார்.

அஜ்மல் நிசாரின் நடவடிக்கை சரியில்லை என்பதால் அந்த பெண் தான் கொடுத்த நகை, பணத்தை திருப்பி தரும்படி கேட்டார். ஆனால் அதற்கு மறுத்த அஜ்மல் நிசார், தன்னுடன் நெருக்கமாக இருக்கும்போது எடுத்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டினார்.

இதனால் பயந்துபோன இளம்பெண், தனது தந்தை மூலம் வடக்கு கடற்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜ்மல் நிசாரை பிடித்து விசாரணை செய்தனர்.

இதில் அவர், இதுபோல பல இளம்பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பழகி வந்துள்ளார். பின்னர் அவர்களிடமும் இதேபோல் கடன் இருப்பதாக கூறி அவர்களை ஏமாற்றி நகை, பணம் பறித்து வந்துள்ளார். அஜ்மல் நிசாரின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.

அதில் பல பெண்களின் நிர்வாண படங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அஜ்மல்நிசார், பெரும்பாலும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், இளம் விதவைகளை குறிவைத்து திருமண தகவல் மையங்களில் உள்ள அவர்களின் பெயர், செல்போன் எண்களை தெரிந்து கொண்டு அவர்களிடம் முகநூல் மற்றும் செல்போன் வீடியோ கால் மூலம் பேசி பழகி தனது மோசடியை அரங்கேற்றி வந்துள்ளார்.

இதுபற்றி வடக்குகடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி மன்னன் அஜ்மல் நிசாரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும் அவரால் ஏமாற்றப்பட்ட இளம்பெண்கள் யார் யார் என விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com