சேலம் அழகாபுரத்தில் லாரி அதிபர் வீட்டில் நகை-பணம் கொள்ளை - மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

சேலம் அழகாபுரத்தில் லாரி அதிபர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சேலம் அழகாபுரத்தில் லாரி அதிபர் வீட்டில் நகை-பணம் கொள்ளை - மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
Published on

சேலம்,

சேலம் ரெட்டியூர் கனரா வங்கி காலனியை சேர்ந்தவர் தேவேந்திரன். லாரி அதிபர். இந்தநிலையில் அவர் நேற்று முன்தினம் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி குடும்பத்துடன் மேட்டூரில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சாமி கும்பிட வீட்டை பூட்டி விட்டு சென்றார். பின்னர் அங்கு சாமி கும்பிட்டு விட்டு பிற்பகல் தேவேந்திரன் குடும்பத்தினருடன் வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து தேவேந்திரன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அழகாபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாக இருந்த மர்ம ஆசாமிகளின் கைரேகைகளை சேகரித்து கொண்டனர். இது தொடர்பாக தேவேந்திரன் அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல் கடந்த வாரம் சுவர்ணபுரியை சேர்ந்த தொழில் அதிபர் ஜாகீர் உசேன் வீட்டில் மர்ம ஆசாமிகள் 10 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். அழகாபுரம் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொள்ளை சம்பவங்கள் பொதுமக்கள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே குற்றச்செயல்களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், தேவேந்திரன் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு கோவிலுக்கு சென்றதை மர்ம ஆசாமிகள் கண்காணித்துள்ளனர். இதை பயன்படுத்தி அவர்கள் வீட்டின் உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அந்த வீட்டில் எடுக்கப்பட்ட கைரேகைகளை, பழைய குற்றவாளிகளின் ரேகைகளுடன் ஒப்பிட்டு வருகிறோம்.

சந்தேகப்படும்படியான நபர்களை பிடித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com