காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பெரிய வகை மீன்கள் விற்பனைக்கு வரவில்லை

மீன்பிடி தடைக்காலம் முடிந்த பிறகு கடலுக்குள் சென்ற மீனவர்களுக்கு பெரிய வகை மீன்கள் கிடைக்காததால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பெரிய வகை மீன்கள் விற்பனைக்கு வரவில்லை. இதனால் மீன்களின் விலையும் குறையாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பெரிய வகை மீன்கள் விற்பனைக்கு வரவில்லை
Published on

திருவொற்றியூர்,

மீன்கள் இனப்பெருக்கத்துக்காக கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது. இந்த தடைக்காலம் முடிந்த பிறகு கடந்த 14-ந் தேதி நள்ளிரவு முதல் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள், கடலுக்குள் சென்று இருந்தனர். தடைக்காலம் முடிந்து நேற்று முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு அதிகளவில் பெரிய வகை மீன்கள் விற்பனைக்கு வரும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர்.

இதனால் நேற்று அதிகாலை முதலே காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீன்வாங்க குவிந்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வகை மீன்கள் விற்பனைக்கு வரவில்லை.

இதேபோல் மீன்களின் விலையும் குறையவில்லை. தடைக்காலத்தில் விற்கப்பட்ட அதே விலையிலேயே நேற்றும் மீன்கள் விற்கப்பட்டதால் மீன் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதனால் மீன் பிரியர்கள், வேறு வழிஇன்றி சிறிய வகை மீன்களையே அதிக விலை கொடுத்து வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று ஒரு கிலோ வஞ்சிரம் (சிறியது)-ரூ.900, வவ்வால்-ரூ.850, சங்கரா-ரூ.350, கடம்பா-ரூ.300, இறால்-ரூ.450, நண்டு-ரூ.250, மத்திமீன்-ரூ.150, நெத்திலி-ரூ.200 என்ற விலையில் விற்கப்பட்டன.

டீசல் விலை உயர்வு காரணமாக சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லாமல் உள்ளனர். இதன் காரணமாகவும் மீன்வரத்து குறைந்து உள்ளதாக தெரிகிறது.

மேலும் ஆழ்கடலுக்குள் சென்ற விசைப்படகு மீனவர்கள், வழக்கமாக 15 நாட்களுக்கு பிறகுதான் கரை திரும்புவார்கள். தற்போது குறைந்த தூரத்தில் சென்று மீன்பிடித்த மீனவர்கள் மட்டும் கரை திரும்பி உள்ளனர். எனவே இனிவரும் வாரங்களில் பெரிய வகை மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு வரும் என்றும், அப்போது மீன்களின் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com