‘காக்கா முட்டை’ பட பாணியில் செல்போன் பறித்த போது ஓடும் ரெயிலில் இருந்து விழுந்த வாலிபரின் கால் துண்டானது

திருவொற்றியூர் அருகே சிறுவர்கள், ஓடும் ரெயிலில் வாலிபரை கம்பால் தாக்கி செல்போனை பறித்த போது நிலைதடுமாறி விழுந்த அவர், ரெயில் சக்கரத்தில் சிக்கி கால் துண்டானது.
‘காக்கா முட்டை’ பட பாணியில் செல்போன் பறித்த போது ஓடும் ரெயிலில் இருந்து விழுந்த வாலிபரின் கால் துண்டானது
Published on

திருவொற்றியூர்,

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லூர் வரை செல்லும் நெல்லூர் பயணிகள் ரெயில் நேற்று காலை 8.30 மணியளவில் திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரெயில்வே கேட் பகுதியில் சிக்னலுக்காக மெதுவாக சென்று கொண்டிருந்தது.

அப்போது, காக்கா முட்டை சினிமா பட பாணியில் தண்டவாளம் அருகே நின்று கொண்டு இருந்த 3 சிறுவர்கள், ரெயில் படிக்கட்டில் செல்போனில் பேசியபடி நின்ற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராம சிவா (வயது 27) என்ற வாலிபரின் கையில் கம்பால் அடித்து, அவரிடம் இருந்த செல்போனை பறித்துச்சென்றனர்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத ராம சிவா, வலி தாங்க முடியாமல் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். அப்போது ரெயில் சக்கரத்தில் சிக்கி, அவரது கால் துண்டானது. வலியால் அலறியபடி உயிருக்கு போராடிய அவரை கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சம்பவம் குறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரிடம் செல்போனை பறித்துச்சென்ற சிறுவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com