கள்ளக்காதலனை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வந்து 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பெண் கைது

கும்மிடிப்பூண்டி அருகே கள்ளக்காதலனை கொலை செய்த வழக்கில் ஜாமினில் வெளியே வந்து 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பெண்ணை கேரளாவில் போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்காதலனை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வந்து 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பெண் கைது
Published on

கும்மிடிப்பூண்டி,

கேரள மாநிலம் எர்ணாக்குளம் அடுத்த களம்பஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மேகலை என்ற மணிமேகலை ( வயது 45). இவருக்கு திருமணமான நிலையில் தனது முதல் கணவரை விட்டு விட்டு அதே பகுதியை சேர்ந்த ஏற்கனவே திருமணமான கார்த்திகேயன் (51) என்பவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்தார்.

கடந்த 2010-ம் ஆண்டு கார்த்திகேயனுக்கு கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. இதனையடுத்து தனது கள்ளக்காதலி மேகலையுடன், கும்மிடிப்பூண்டியை அடுத்த பாப்பான்குப்பத்தில் வாடகைக்கு வீடு எடுத்து கார்த்திகேயன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், கள்ளக்காதலி மேகலையின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கார்த்திகேயன், அவரிடம் கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி தகராறில் ஈடுபட்டார். இதில் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் மேகலை, கார்த்திகேயனை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேகலையை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 2013-ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்த மேகலை, கேரளா சென்று தனது முதல் கணவருடன் 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். அவரை கைது செய்ய திருவள்ளூர் கோர்ட்டு பிடிவாராண்டு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பரிபூரணம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சபாபதி, சுரேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் கேரளாவுக்கு சென்று கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த மேகலையை கேரளாவில் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com