கமல்ஹாசனுக்கு திருச்சி ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு பொதுக்கூட்டத்தில் இன்று பேசுகிறார்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு திருச்சி ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்சியில் இன்று நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசுகிறார்.
கமல்ஹாசனுக்கு திருச்சி ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு பொதுக்கூட்டத்தில் இன்று பேசுகிறார்
Published on

திருச்சி,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டம் இன்று (புதன்கிழமை) மாலை திருச்சி பொன்மலை ஜி. கார்னர் ரெயில்வே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசுவதற்காக கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் நேற்று மதியம் சென்னையில் இருந்து திருச்சிக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டார்.

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் அவரை வரவேற்பதற்காக அவரது கட்சி தொண்டர்கள் ஏராளமானவர்கள் கொடியுடன் திரண்டு நின்றனர். ரெயில் நிலையத்தின் பிரதான வாசலில் பேண்டு வாத்தியங்கள் முழங்கின.

மாலை 6.45 மணிக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் முதலாவது பிளாட்பாரத்தில் வந்து நின்றது. பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் ரெயில் வந்து நின்றதும் கமல்ஹாசன் இருந்த குளிர்சாதன பெட்டியை நோக்கி ஓடி அதனை சூழ்ந்து கொண்டனர். தொண்டர்களை பார்த்ததும் கமல்ஹாசன் கையசைத்தபடியே கீழே இறங்கினார்.

கட்சியின் உயர்நிலை குழு உறுப்பினர் சிவகுமார், திருச்சி மாவட்ட பொறுப்பாளர் சுரேஷ், துணை பொறுப்பாளர் கிருஷ்ணகுமார் உள்பட நிர்வாகிகள் பலர் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர். கமல்ஹாசனுடன் உயர்நிலை குழு உறுப்பினர் நடிகை ஸ்ரீபிரியா உள்பட 20 நிர்வாகிகளும் வந்திருந்தனர்.

ரெயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் சங்கிலி போல் நின்று கமல்ஹாசன் மற்றும் அவருடன் வந்தவர்களை பாதுகாப்பாக வெளியே அழைத்து வந்தனர். கமல்ஹாசனை பார்ப்பதற்காக பலர் முண்டியடித்துக்கொண்டு வந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ரெயில் நிலைய வாசலில் வைக்கப்பட்டு இருந்த மெட்டல் டிடெக்டர் கருவி தள்ளிவிடப்பட்டது. கமல்ஹாசன் வெளியே வந்ததும் தயாராக நின்று கொண்டிருந்த வேனின் மேல் பகுதியில் ஏறி நின்றார். பின்னர் நான்குபுறமும் தொண்டர்களை பார்த்து கையசைத்தார். சில தொண்டர்கள் கொடுத்த பூங்கொத்தையும் வாங்கி கொண்டார்.

அதன் பின்னர் தான் தங்குவதற்கான ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார். கமல்ஹாசன் வருகையையொட்டி ஜங்ஷன் ரெயில் நிலைய பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவித்த கமலஹாசன் காருக்கு போலீசார் வழி ஏற்படுத்தி கொடுத்து அனுப்பி வைத்தனர்.

நடிகர் கமல்ஹாசன் இன்று காலை 11 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கிறார். மாலை 6 மணி அளவில் ஜி.கார்னர் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

இதற்காக அங்கு திறந்த வெளியில் மேடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பொதுக்கூட்டத்துக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் அதிக அளவில் வருவார்கள், இந்த கூட்டத்தை மாநாடு போல் நடத்துவோம் என்று அவரது கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com