அனைத்து திசைகளையும் கண்காணிக்க 7 பீரங்கிகள் இருந்த கமுதி வட்டக்கோட்டை

அனைத்து திசைகளையும் கண்காணிக்க கமுதி வட்டக்கோட்டையில் 7 பீரங்கிகள் இருந்துள்ளது மரபு நடையின் மூலம் தகவல் தெரியவந்துள்ளது.
அனைத்து திசைகளையும் கண்காணிக்க 7 பீரங்கிகள் இருந்த கமுதி வட்டக்கோட்டை
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்களை மாணவர்கள், பொதுமக்கள் நேரில் கண்டு அறிந்துகொள்ள செய்யும் மரபுநடை நிகழ்வை ஒவ்வொரு மாதமும் 3-வது ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தி வருகிறது. இதன்படி 3-வது மரபு நடை நிகழ்வு கமுதி கோட்டையில் நடந்தது.

இதன் மூலம் கமுதி வட்டக்கோட்டையில் அனைத்து திசைகளையும் கண்காணிக்க 7 பீரங்கிகள் அமைக்கப்பட்டு இருந்ததாக தகவல் தெரிய வந்துள்ளது. நிகழ்ச்சியில், நிறுவனத்தின் செயலாளர் ஞானகாளிமுத்து அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு பேசியதாவது:- வணிகம், சமணம், கோட்டை, கழுமரங்கள், மாலைக்கோவில்கள், பாரம்பரிய தாவரங்கள் என பல்வேறு பழமை தடயங்களை கொண்ட வரலாற்று சுரங்கமாக கமுதி உள்ளது.

பழங்காலம் முதல் கமுதி ஒரு வணிக மையமாக இருந்துள்ளது. வழிவிட்ட அய்யனார் கோவிலில் உள்ள 10-ம் நூற்றாண்டு வட்டெழுத்து கல்வெட்டில் ஐந்நூற்றுவர் எனும் வணிகக்குழுவின் மெய்க்கீர்த்தி உள்ளது. வழிவிட்ட அய்யனார் கோவில், பசும்பொன் ஆகிய இடங்களில் 9,10-ம் நூற்றாண்டை சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள் உள்ளன.

ராமநாதபுரத்தில் இருந்து நெல்லை செல்லும் பாதையில் கமுதி உள்ளது. இவ்வழியில்தான் ஜாக்சன் துரையை சந்திக்க கட்டபொம்மன் வந்துள்ளார். குண்டுகுளம், ஆரைகுடி உள்ளிட்ட பல இடங்களில், உடன்கட்டை ஏறிய பெண்களுக்கு அமைக்கப்பட்ட மாலைக்கோவில்கள் உள்ளன. நாயக்கர் காலத்தை சேர்ந்த இவை 300 முதல் 500 ஆண்டுகள் வரை பழமையானவை.

கி.பி.1713 முதல் கி.பி.1725 வரை சேதுநாட்டை ஆண்ட முத்து விஜய ரெகுநாதசேதுபதி என்ற திருவுடையத்தேவர், பிரான்ஸ் நாட்டுப்பொறியியல் வல்லுநர்களின் உதவியுடன் புதிய வடிவங்களில் கமுதி, பாம்பன், செங்கமடை ஆகிய இடங்களில் மூன்று புதிய கோட்டைகளை கட்டினார். இதில் கமுதிக்கோட்டை வட்டவடிவில் உள்ளது. குண்டாற்றின் கரையில் பாறைகள் நிறைந்த மேடான அடர்ந்த காட்டுப்பகுதியில் இக்கோட்டை கட்டப்பட்டுள்ளது. இதன் மேற்கு மற்றும் வடக்குப்பகுதிகளில் உள்ள பாறைகள் உடைக்கப்பட்டு கோட்டை கட்ட பயன்படுத்தப்பட்டுஉள்ளது. வெட்டி எடுக்கப்பட்ட பெரிய அளவிலான பாறைகள் தற்போதும் அப்பகுதியில் கிடப்பது இதை உறுதியாக்குகிறது. பாறைகளை வெட்டியதால் ஏற்பட்ட பள்ளம் அகழி போல் அமைந்துள்ளது.

இதில் 7 கண்காணிப்பு கோபுரங்கள் போன்ற அமைப்பு உள்ளது. இது வீரர்கள் நின்று காவல்புரியவும், கண்காணிக்கவும், பீரங்கி இயக்கவும் பயன்படுத்தப்பட்டுஉள்ளது. துப்பாக்கி கொண்டு தூரத்தில், அருகில் உள்ளவர்களை குறி பார்க்க இக்கோட்டையின் மேல் சுவர்களில் துளைகள் உள்ளன. இக்கோட்டை செங்கற்களால் கட்டப்பட்டு, அதன் உள் மற்றும் வெளிப்புறச்சுவர்களில் பலவிதமான பாறைக்கற்களை கொண்டு ஒட்டியுள்ளனர். இதனால் இக்கோட்டை வெளியில் இருந்து பார்க்கும்போது கற்கோட்டை போன்ற அமைப்பில் காணப்படுகிறது. கோட்டை கட்டுவதற்கான செங்கற்களை இங்கேயே தயாரித்துள்ளனர். சிறிய கோட்டையாக இருந்தாலும் இரண்டடுக்கு வரிசையில் பாதுகாப்பு இருந்துள்ளது.

இங்கு குழல் ஆதண்டை, நாட்டு வீழி ஆகிய அரியவகை மூலிகை தாவரங்கள் உள்ளன.

கி.பி.1877-ம் ஆண்டு குண்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இக்கோட்டையின் பல பகுதிகள் சேதமடைந்தன. கற்கள் பெயர்ந்து வெறும் செங்கல் கோட்டையாக இப்போது காட்சியளிக்கிறது. ராமநாதபுரம் சேதுநாட்டை ஆங்கிலேயர் கைப்பற்றிய பின்பு, அனைத்து கோட்டைகளை இடித்தபோது, இதையும் இடித்து சேதப்படுத்திவிட்டனர். இதில் எஞ்சிய பகுதிகளே தற்போது நாம் காணும் இக்கோட்டை. இவ்வாறு கூறினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் கமுதி வெள்ளைப்பாண்டியன், பேரையூர் முனியசாமி, ராமநாதபுரம் நிவாஸ் சங்கர் ஆகியோர் செய்திருந்தனர். 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு கோட்டையின் அமைப்பு, கட்டுமானம், மூலிகைகள் ஆகியவற்றை நேரில் பார்த்து அறிந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் பாரம்பரிய பானமான பானகம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com