கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் - பா.ஜனதா தலைவர் முருகன் பேட்டி

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று பா.ஜனதா மாநில தலைவர் முருகன் கூறினார்.
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் - பா.ஜனதா தலைவர் முருகன் பேட்டி
Published on

நெல்லை,

பாளையங்கோட்டை சாந்திநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நிருபர்களிடம் கூறியதாவது:- கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்கள் கட்சி சார்பில் பல்வேறு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எப்படி நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு செய்து வருகிறேன்.

அந்த வகையில் நெல்லையில் ஆய்வு செய்ய வந்து இருக்கிறேன். நான் தலைவர் பதவி ஏற்ற பிறகு முதன்முதலாக நெல்லை வந்து இருக்கிறேன். கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, வளர்ச்சி பணிகள் குறித்து முடிவு செய்யப்படும். கட்சிக்குள் கோஷ்டி பூசல் இருப்பதாக கூறுகிறார்கள். கட்சியில் எந்த கோஷ்டி பூசலும் இல்லை.

தமிழ் கடவுளான முருக பெருமானின் புகழ்பாடும் கந்த சஷ்டி கவசத்தை சிலர் இழிவுபடுத்தி உள்ளனர். இந்து மதம், புராணங்கள், இந்து தெய்வங்கள், வழிபாட்டு முறைகளை இழிவுபடுத்தி சமூக வலைதளத்தில் கருப்பர் கூட்டம் என்ற பெயரில் உள்ள யூடியூப் சேனலில் பலர் வீடியோ பதிவிட்டுள்ளனர். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த பதிவு முருக பக்தர்களை மிகவும் வேதனையடைய செய்து இருக்கிறது. இதுதொடர்பாக சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். இன்னும் சிலரை கைது செய்ய வேண்டி உள்ளது. அவர்களை விரைவில் போலீசார் கைது செய்ய வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்திலும், தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியது தொடர்பாக தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. கருப்பர் கூட்டம் வலைதளத்தில் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். இந்த வலைதளத்தை தடை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இறப்பு விகிதம் பற்றி சரியான தகவல்களை தமிழக அரசு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இந்துக்கள் பாதிக்கப்பட்டால் பா.ஜனதா குரல் கொடுக்கும். இவ்வாறு முருகன் கூறினார்.

பேட்டியின்போது, மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன், மாவட்ட தலைவர் மகராஜன், மாவட்ட பொதுச்செயலாளர் கணேசமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com