

காங்கேயம்
காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வேப்பிலை, துளசி, வில்வம், அருகம்புல், விபூதி, மஞ்சள்தூள் வைத்து பூஜிக்கப்படுகிறது.
ஆண்டவன் உத்தரவு பெட்டி
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் கொங்குமண்டலத்தில் முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். மேலும் சிவவாக்கிய சித்தர் அருள்பெற்ற தலமாகவும், விநாயகப் பெருமான் முருகனை வணங்கும் தலமாகவும் விளங்குகிறது. நாட்டில் வேறு எந்தக் கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது.
சுப்பிரமணியசாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி அதை கோவில் முன் மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார். உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறினால் சாமியிடம் பூப்போட்டு அதன்பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் ஏதும் கிடையாது.
சமுதாயத்தில் தாக்கம்
அடுத்த பொருள் வேறு பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை உத்தரவு பெட்டியில் இந்த பொருள் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு உத்தரவான பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்தப் பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம். முந்தைய காலங்களில் சைக்கிள் வைத்து பூஜிக்கப்பட்டபோது நவீன வாகனங்களின் பெருக்கத்தால் சைக்கிளின் பயன்பாடு குறைந்து போனது.
துப்பாக்கி தோட்டா வைத்து பூஜிக்கப்பட்டபோது கார்கில் போர் ஏற்பட்டு அதில் இந்தியா பாகிஸ்தானை வென்றது. மண் வைத்து பூஜிக்கப்பட்டபோது ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடித்து நிலத்தின் மதிப்பு பன் மடங்கு உயர்ந்தது. தண்ணீர் வைத்து பூஜிக்கப்பட்டபோது சுனாமி ஏற்பட்டு வெள்ளத்தால் ஏராளமானோர் மடிந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருள் ஏதாவது ஒருவகையில் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளது.
வேப்பிலை, துளசி, அருகம்புல்
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா சென்னிமலை பகுதியைச்சேர்ந்த நாகேஸ்வரி (வயது 31) என்ற பக்தரின் கனவில் உத்தரவான வேப்பிலை, துளசி, வில்வம், அருகம்புல், விபூதி, மஞ்சள்தூள் ஆகிய பொருட்கள் நேற்று முதல் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது.
இது பற்றி பக்தர்கள் தரப்பில் கூறியதாவது:-
சிவன்மலை ஆண்டவன் உத்தரவான பொருட்கள் ஏதாவது ஒரு வகையில் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெற்று விடும். தற்போது வேப்பிலை, துளசி, வில்வம், அருகம்புல், விபூதி, மஞ்சள்தூள் ஆகிய பொருட்கள் வைத்து பூஜிக்கப்படுவதால், இந்த ஒவ்வொரு பொருளும் ஒரு தெய்வங்களை குறிக்கும் விதமாக உள்ளது. அதாவது வில்வம் சிவனையும், வேப்பிலை மாரியம்மனையும், துளசி பெருமாளையும், அருகம்புல் விநாயகரையும், விபூதி முருகனையும் குறிக்கிறது. இதை தவிர மஞ்சள் தூள் கிருமி நாசினியாகவும், மங்கலகரமானது என்பதையும் குறிக்கிறது.
இந்த தெய்வங்களின் சக்தி ஒன்று சேர்ந்து தற்போது உள்ள சூழ்நிலையில் உலகத்தை காக்கும் என்றும், மேலும் இதனுடைய தாக்கம் வரும் காலங்களில் தெரியும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இதற்கு முன்னதாக ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த ஏப்ரல் 23- ந்தேதி முதல் குங்குமம் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.