காரைக்கால் பகுதிகளில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது

காரைக்கால் மற்றும் தமிழக பகுதிகளில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
காரைக்கால் பகுதிகளில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது
Published on

காரைக்கால்,

காரைக்காலை அடுத்த திருமலைராயன்பட்டினம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மரி கிறிஸ்டியன் பால் உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் நேற்று அதிகாலையில் மேலவாஞ்சூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் ஒன்றில் வேகமாக வந்து 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்களிடம் மோட்டார் சைக்கிளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை. மேலும் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள்.

இதில் அவர்கள் நாகை மாவட்டம் நம்பியார் குடியிருப்பு சுனாமி நகரை சேர்ந்த ராமசந்திரன் மகன் அஜித் (வயது21), அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் சின்னையன் மகன் அருள்ராஜ் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது.

அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர்கள் காரைக்கால் கோட்டுச்சேரி, நிரவி, திருமலைராயன்பட்டினம், நெடுங்காடு மற்றும் கடலூர் பகுதிகளில், பெண்களிடம் வழிப்பறி செய்ததை ஒப்புக்கொண்டனர். அதையடுத்து அஜித், அருள்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி அவருடைய கூட்டாளியான நாகையை சேர்ந்த பிரகாஷ்ராஜ் (18) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் அளித்த தகவலின் பேரில் அருள்ராஜ், அஜித் ஆகியோர் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நகைகளையும், 2 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப் பட்ட நகைகளின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசாரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், தெற்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு வம்சிதரரெட்டி ஆகியோர் பாராட்டினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com