கறம்பக்குடியில் பரிதாபம்: கழிவுநீர் தொட்டியில் விழுந்து அண்ணன்-தம்பி பலி - பெற்றோர் கதறல்

கறம்பக்குடியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த அண்ணன்-தம்பி பரிதாபமாக இறந்தனர். அவர்களுடைய உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.
கறம்பக்குடியில் பரிதாபம்: கழிவுநீர் தொட்டியில் விழுந்து அண்ணன்-தம்பி பலி - பெற்றோர் கதறல்
Published on

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்தவர் குமார்(வயது 35). இவருடைய மனைவி ராஜேஸ்வரி(30). இவர்களுக்கு கிருத்திக்ரோசன்(5), அரவிந்த்(4) என 2 மகன்கள். குமாரும், ராஜேஸ்வரியும் கறம்பக்குடி பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.இவர்கள் குடும்பத்துடன் கறம்பக்குடி செட்டியார் தெருவில் உள்ள விட்டல்தாஸ் என்பவருக்கு சொந்தமான குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை கிருத்திக்ரோசன், அரவிந்த் ஆகியோர் வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்தனர். இரவு நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால், குமாரும், ராஜேஸ்வரியும் வெளியே வந்து பார்த்தனர். ஆனால் அவர்களை காணவில்லை.

இதையடுத்து 2 பேரையும் பெற்றோரும், அக்கம், பக்கத்தினரும் தேடினர். அப்போது வீட்டின் பின்பகுதியில் இருந்த கழிவுநீர் தொட்டியின் மேல்மூடி உடைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். குமார் உடனடியாக கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி பார்த்தபோது, கிருத்திக்ரோசனும், அரவிந்தும் கழிவுநீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரியவந்தது. அவர்களுடைய உடலை பார்த்து பெற்றோரும், அக்கம் பக்கத்தினரும் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, 2 சிறுவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து அண்ணன்-தம்பி பலியான சம்பவம் கறம்பக்குடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com