

பெங்களூரு,
கர்நாடக கூட்டணி அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக காங்கிரசை சேர்ந்த அஜய்சிங் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டார். அவரது பதவி ஏற்பு நிகழ்ச்சி பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் டெல்லி பிரதிநிதியாக அஜய்சிங் எம்.எல்.ஏ. பதவி ஏற்றார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பேசியதாவது:-
அஜய்சிங் எம்.எல்.ஏ., வருங்கால தலைவர். அவருக்கு மந்திரி பதவி கிடைத்திருக்க வேண்டும். வரும் நாட்களில் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அவர் தனது அரசியல் வாழ்க்கையில் முதல் படியாக டெல்லி பிரதிநிதியாக பதவி ஏற்றுள்ளார். இந்த முதல் படி பெரிய படியாக மாற வேண்டும். அஜய்சிங் தனது தந்தை தரம்சிங்கை போல் அனைவரிடமும் சிரித்த முகத்துடன் பழகுகிறார். இவ்வாறு பரமேஸ்வர் பேசினார்.
நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், நானும், அஜய்சிங்கின் தந்தை தரம்சிங்கும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். எங்களின் நட்பில் பிளவை ஏற்படுத்த சிலர் சதி செய்தனர். அதையும் மீறி நாங்கள் நல்ல உறவுடன் இருந்தோம். அஜய்சிங்கிற்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அவர் சிறப்பான முறையில் பணியாற்ற வேண்டும். அவருக்கு மந்திரி பதவியை பெற்றுத்தர நான் எனது சக்தியைமீறி முயற்சி செய்தேன். ஆனால் அது முடியாமல் போய்விட்டது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சித்தராமையா உள்பட காங்கிரஸ் மந்திரிகள் கலந்து கொண்டனர். ஆனால் முதல்-மந்திரி குமாரசாமி கலந்துகொள்ளவில்லை. காங்கிரஸ் மீது அவருக் அதிருப்தி ஏற்பட்டுள்ளதால், அவர் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.