

திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது.
2-வது நாளான நேற்று முன்தினம் இரவில் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் தனித்தனி இந்திர விமானங்களில் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
பூத வாகனத்தில்...
விழாவின் 3-ம் நாளான நேற்று காலை 10.30 மணியளவில் விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் பூத வாகனத்திலும் அருணாசலேஸ்வரர் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்திலும் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் கோவில் யானை ருக்கு முன்னே செல்ல மேள தாளங்கள் முழங்க வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், அதன்பின்னே பூத வாகனத்தில் சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மாட வீதிகளில் பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
நீண்ட வரிசை
மேலும் கோவிலில் பகல் 12 மணியளவில் சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கோவிலில் சங்குகளில் புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு யாக சாலை பூஜை நடைபெற்றது. கோவிலில் ஏராளமான பக்தர்கள் நேற்று நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில் கலையரங்கத்தில் பரதநாட்டியம், பக்தி இன்னிசை கச்சேரிகள் போன்ற நிகழச்சிகள் நடைபெற்றது.
இரவு 10 மணியளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் சிம்ம வாகனம் மற்றும் வெள்ளி அன்ன வாகனத்தில் கோவில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.