நசரத்பேட்டையில் ஓட்டல் அறையில் மர்மமாக இறந்து கிடந்த கேரள ஆசாமி; கண்காணிப்பு கேமராவில் சிக்கிய பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு

நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த கேரள மாநில ஆசாமி ஒருவர் வாயில் நுரையுடன் மர்மமாக இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கண்காணிப்பு கேமராவில் சிக்கிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
நசரத்பேட்டையில் ஓட்டல் அறையில் மர்மமாக இறந்து கிடந்த கேரள ஆசாமி; கண்காணிப்பு கேமராவில் சிக்கிய பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு
Published on

கேரளாவை சேர்ந்தவர்

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் சாஜின் (வயது 40). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலை சம்பந்தமாக சென்னை வந்த நிலையில்,பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை அறைக்குள் சென்ற அவர், நேற்று காலை வரை வெளியே வராததால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் அறை கதவை தட்டியுள்ளனர். அப்போதும், கதவை திறக்காததால் நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, தகவல் அறிந்து நசரத்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஓட்டல் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

இறந்து கிடந்தார்

அப்போது, வாயில் நுரை தள்ளியபடி நிர்வாண நிலையில் சாஜின் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து நடத்தப்பட்ட விசாரணையில், கடைசியாக அவரது அறைக்கு ஒரு பெண் வந்து சென்றிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இவர் நிர்வாணமாக படுக்கையில் இறந்து இருப்பதால் தற்கொலை செய்து கொண்டாரா? தற்கொலைக்கான காரணம் என்ன? அல்லது விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் நசரத்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com