கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்தை பா.ம.க.வினர் முற்றுகை

கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்தை பா.ம.க.வினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்தை பா.ம.க.வினர் முற்றுகை
Published on

குடியாத்தம்,

கே.வி.குப்பத்தை அடுத்த தேவரிஷிகுப்பத்தில் நேற்று மாலை பா.ம.க. சார்பில் கிளை கூட்டம் நடந்தது. இக்கூட்டம் முடிந்த பின்னர் பா.ம.க.வை சேர்ந்த சிலர் கெம்மங்குப்பம் பகுதி வழியாக இரவு 7.30 மணி அளவில் சென்றனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலர், பா.ம.க.வினரை வழிமறித்து திடீரென தாக்கியதாக தெரிகிறது. இதில் பா.ம.க.வை சேர்ந்த ஜெகதீசன், மகாராஜா ஆகியோர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பா.ம.க. மாநில துணை செயலாளர் கே.எல்.இளவழகன், முன்னாள் அமைச்சர் என்.டி.சண்முகம், மாநில துணைத்தலைவர் சி.கே.ரமேஷ், மாவட்ட செயலாளர்கள் கு.வெங்கடேசன், ஜி.கே.ரவி உள்பட ஏராளமான பா.ம.க.வினர் கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்துக்கு 9 மணி அளவில் திரண்டு வந்தனர்.

இதையடுத்து அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, பா.ம.க.வினரை தாக்கிய நபர்களை கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைதொடர்ந்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு, இன்ஸ்பெக்டர் இருதயராஜ் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார், பா.ம.க.வினரை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இந்த போராட்டம் 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் பா.ம.க.வினர் லத்தேரி போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில், அன்னங்குடி கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் மாற்று சமுதாய பெண்களை பற்றி தவறான முறையில் பேசி, அதனை சமூக வலைத்தளத்தில் பரவ விட்டுள்ளார். இதனால் கே.வி.குப்பம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com