காதலியின் தாயாரை கொன்று பேரலில் அடைத்த வாலிபர் போலீசுக்கு பயந்து தற்கொலை

திருவனந்தபுரத்தில் காதலியின் தாயாரை கொன்று பேரலில் அடைத்த வாலிபர் போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.
காதலியின் தாயாரை கொன்று பேரலில் அடைத்த வாலிபர் போலீசுக்கு பயந்து தற்கொலை
Published on

திருவனந்தபுரம்,

திருவனந்தபுரம் புறநகர் பகுதியில் உள்ள கல்லறை தோட்டம் முன்பு பேரல் ஒன்று பல மாதங்களாக கேட்பாரற்று கிடந்தது. இதுபற்றி அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த பேரலை கைப்பற்றி திறந்து பார்த்தனர். பேரல் முழுவதும் கான்கிரீட் கலவையால் மூடப்பட்டிருந்தது. போலீசார் கான்கிரீட் கலவையை உடைத்து பார்த்தனர். அதில் ஒரு பெண்ணின் பிணம் காணப்பட்டது. கால்கள் இரண்டும் பின்புறமாக கட்டப்பட்டு, கைகள் மடங்கிய நிலையில் நிர்வாண நிலையில் பிணம், கான்கிரீட் கலவைக்குள் புதைக்கப்பட்டிருந்தது. அதோடு சில ரூபாய் நோட்டுகளும் இருந்தன.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த பெண் யார்? எதற்காக கான்கிரீட் கலவைக்குள் புதைக்கப்பட்டார்? என்பது பற்றி விசாரித்தனர். இதற்காக பிணத்தை பரிசோதித்த போது அந்த பெண் இறந்து சுமார் ஓராண்டுக்கு மேல் இருக்கும் என்பது தெரியவந்தது. இதனை தவிர போலீசாருக்கு அந்த பெண் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆனால் இந்த வழக்கை எப்படியும் துப்புதுலக்கி யார் இந்த பெண்? எப்படி கொல்லப்பட்டார்? என்பதை கண்டுபிடித்தே தீரவேண்டும் என முடிவு செய்த போலீசார் அந்த பெண்ணின் பிணத்தை அங்கிருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று மீண்டும் பரிசோதனை செய்தனர்.

இதில் பெண்ணின் கால்களில் முறிவு ஏற்பட்டு அதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றிருந்த வடு இருப்பதை போலீசார் கண்டனர். மேலும் முறிவுக்காக அந்த பெண்ணின் காலில் இரும்பு தகடு பொருத்தப்பட்டு அது 6.5 செ.மீ. நீள ஸ்குரூ மூலம் இணைக்கப்பட்டிருப்பதையும் பார்த்தனர். அந்த ஸ்குரூ வித்தியாசமாக இருந்ததால், அந்த ஸ்குரூவை எந்த மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் தயாரித்தது என்பதை விசாரித்தனர். இதில் அந்த ஸ்குரூ, பூனாவில் உள்ள மெடிக்கல் நிறுவனம் தயாரித்தது தெரியவந்தது. அந்த நிறுவனத்தின் ஸ்குரூ, திருவனந்தபுரம் அருகில் உள்ள சில எலும்பு முறிவு சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரிகளில் பயன்படுத்தப்பட்டு வந்ததை போலீசார் அறிந்தனர். அந்த ஆஸ்பத்திரிகளுக்கு சென்ற போலீசார் காலில் 6.5 செ.மீ. நீள ஸ்குரூ பொருத்தும் அளவுக்கு யாராவது பெண்கள் சிகிச்சை பெற்றனரா? என்பதை விசாரித்தனர். அதில் 6 பெண்களுக்கு இத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதில் 5 பெண்கள் அதே ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதும் ஒரு பெண் மட்டும் பல மாதங்களாக சிகிச்சைக்கு வரவில்லை என்ற விவரத்தையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

சிகிச்சைக்காக செல்லாத பெண் யார்? என தேடியபோது அவர் திருவனந்தபுரத்தை அடுத்த உதயன்பேரூரை சேர்ந்த தாமோதரன் என்பவரின் மனைவி சகுந்தலா (வயது 42) என்பது தெரியவந்தது. இவர் அப்பகுதியில் தனது மகளுடன் வசித்து வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சகுந்தலா காணாமல் போனபின்பும் அவரை மகள் தேடவில்லை. போலீசிலும் புகார் செய்யவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், சகுந்தலாவின் மகளை தேடிப்பிடித்து விசாரித்ததோடு அவருக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்தனர். இதன் அறிக்கை பேரலில் கண்டுபிடித்த பெண்ணுடன் பொருந்தி போனதை தொடர்ந்து பிணமாக கிடந்த பெண், சகுந்தலா தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதன்பிறகு சகுந்தலா, எப்படி இறந்தார்? என்பதை கண்டுபிடிக்க போலீசார் முயற்சி செய்தனர்.

விசாரணையில் இறங்கிய போது சகுந்தலாவின் மகளுக்கு ஒரு காதலன் இருந்ததும், அவர் சகுந்தலாவின் பிணம் கண்டுபிடிக்கப்பட்ட நாளில் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்ததும் தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சகுந்தலா மகளின் காதலரின் நண்பர்களை பிடித்து ரகசியமாக விசாரித்தனர். இதில் மகளின் காதலனே சகுந்தலாவை கொலை செய்து பேரலில் புதைத்துள்ளார் என்ற மர்மம் வெளிவந்தது.

மகளுக்கும் அந்த வாலிபருக்கும் உள்ள காதலை சகுந்தலா ஏற்க மறுத்ததோடு, காதலனையும் கண்டித்துள்ளார். இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் தான் அவர் சகுந்தலாவை கொன்று பேரலில் புதைத்து உள்ளார். பின்னர் பேரலை அருகில் உள்ள கும்பளம் ஏரியில் போட்டு உள்ளார். ஆனால் பேரல் ஏரியில் இருந்து கரை ஒதுங்கி கல்லறை தோட்டம் அருகே வந்துவிட்டது. அது மக்களின் பார்வையில் பட்டு வெளிச்சத்துக்கு வரவே கொலை நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு குட்டு வெளிவந்து விட்டது.

முறிந்த காலை சரிசெய்ய பொருத்தப்பட்ட இரும்பு பிளேட்டில் இருந்த சாதாரண ஸ்குரூ மூலம் ஒரு பெண்ணின் கொலையில் துப்புதுலங்கி இருப்பது போலீசாரின் திறமையை வெளிப்படுத்துவதாக உள்ளது என்று கேரள மக்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com