சிவகாசி அருகே பயங்கரம்: மகன், மகளை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு தொழிலாளி தற்கொலை

சிவகாசி அருகே வீட்டில் தூங்கிய தனது 2 குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்ற தொழிலாளி போலீசார் சுற்றி வளைத்ததும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
சிவகாசி அருகே பயங்கரம்: மகன், மகளை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு தொழிலாளி தற்கொலை
Published on

தாயில்பட்டி,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சல்வார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி (வயது 42). விறகு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி முனீஸ்வரி (38). இந்த தம்பதியினருக்கு முத்துலட்சுமி (9) என்ற மகளும், முனீஸ்வரன் (4) என்ற மகனும் இருந்தனர்.

அந்தோணி வீட்டுச்செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன் தினம் இரவும் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் அனைவரும் வீட்டில் படுத்து தூங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் அந்தோணி எழுந்தார். பின்னர் வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த மகள் மற்றும் மகனை கத்தியால் ஆட்டை அறுப்பதைப்போல கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். துடிக்க துடிக்க கொடூரமாக இருவரையும் கொன்ற நிலையில் முனீஸ்வரி சத்தம் கேட்டு விழித்துள்ளார்.

தனது இரு குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டுள்ளார். உடனே அந்தோணி அவரையும் கொலை செய்ய விறகு வெட்ட பயன்படுத்த வீட்டில் வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்டிஉள்ளார். உயிர் தப்பிக்க வீட்டை விட்டு வெளியெ வந்த நிலையில் விடாமல் துரத்தி வெட்டியுள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். மனைவியும் இறந்து விட்டதாக கருதி அந்தோணி அங்கிருந்து ஓடி விட்டார்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்த நிலையில் சற்று நேரத்தில் ஊரே அங்கு திரண்டு விட்டது. குற்றுயிராக உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முனீஸ்வரியை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அப்போது சேதுராமலிங்காபுரம் பகுதியில் பட்டாசு ஆலை அருகே முட்புதருக்குள் அந்தோணி பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அங்கு சென்று சுற்றி வளைத்தனர். ஊர் மக்களும் நாலாபுறமும் சூழ்ந்தனர். இதைக்கண்டதும் அவர் ஆவேசமானார். அருகில் வந்தால் கொன்று விடுவேன் என்று கத்தியைக்காட்டி மிரட்டினார். எனினும் அவரை கைது செய்ய போலீசார் முனைப்பு காட்டினர். இந்த நிலையில் திடீரென அந்தோணி தான் வைத்திருந்த கத்தியால் தனது கழுத்தை அறுத்தார். பின்னர் அவர் அங்கேயே ரத்த வெள்ளத்தில் பிணமாக சாய்ந்தார்.

போலீசார் அந்தோணியின் உடல் மற்றும் அவரது 2 குழந்தைகளின் உடலையும் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்கள். சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு நாராயணன் ஆகியோர் சல்வார்பட்டிக்கு சென்று இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அந்தோணி சில நாட்களுக்கு முன்பு மன நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன்பின்னர் அவர் குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com