வாலிபர் கழுத்தை அறுத்து கொலை யார் அவர்? போலீஸ் விசாரணை

திருவொற்றியூரில் வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு, மழைநீர் கால்வாயில் உடல் வீசப்பட்டு கிடந்தார். அவர் யார்?, கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாலிபர் கழுத்தை அறுத்து கொலை யார் அவர்? போலீஸ் விசாரணை
Published on

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் விம்கோ நகரில் தனியார் பள்ளிக்கூடத்தின் பின்புறம் உள்ள மழைநீர் கால்வாயில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவருடைய கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது.

மர்மநபர்கள் அவரது கழுத்தை ஆட்டை அறுப்பதுபோல் அறுத்து கொலை செய்து விட்டு, உடலை மழைநீர் கால்வாயில் வீசி உள்ளனர்.நேற்று காலை இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

கொலையான அந்த வாலிபர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அவர் கறுப்பு நிறத்தில் வெள்ளை கோடு போட்ட டி-சர்ட்டும், கருநீல நிறத்திலான அரைக்கால் சட்டையும் அணிந்து இருந்தார்.

அவருடைய உடல் கிடந்த இடம் அருகே ஆடுகளை வெட்ட பயன்படுத்தும் கத்தி ஒன்று கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். கொலையாளிகள் யார்?, கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலையுண்ட வாலிபர் பார்ப்பதற்கு வடமாநிலத்தை சேர்ந்தவர் போல் தோற்றம் அளிக்கிறார். திருவொற்றியூர், மணலி பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. அதில் வடமாநில வாலிபர்கள் பலர் வேலை பார்த்து வருகிறார்கள்.

எனவே வடமாநிலத்தை சேர்ந்த நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், அந்த வாலிபரை யாரேனும் இங்கு அழைத்து வந்து கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, உடலை கால்வாயில் வீசினார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் அங்குள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வந்த வடமாநில வாலிபர்கள் யாரேனும் மாயமாகி உள்ளனரா? என்ற விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com