சேலம் அருகே கல்லூரி மாணவரை கொன்ற 2 நண்பர்கள் கைது: அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு - உறவினர்கள் போராட்டம்

சேலம் அருகே கல்லூரி மாணவர் கொலையில் அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மாணவரின் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் அருகே கல்லூரி மாணவரை கொன்ற 2 நண்பர்கள் கைது: அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு - உறவினர்கள் போராட்டம்
Published on

சேலம்,

மல்லூர் அருகே நாழிக்கல்பட்டி காந்திநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் திலீப்குமார் (வயது 20). இவர், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (22). இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்தனர். பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து தனித்தனி கோஷ்டியாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திலீப்குமார் தலைமையில் ஒரு தரப்பினரும், திருநாவுக்கரசு தலைமையில் மற்றொரு தரப்பினரும் விநாயகர் சிலைகளை வைத்துள்ளனர். பின்னர் கடந்த 4-ந் தேதி சிலைகளை கரைக்க மேட்டூருக்கு சென்றபோது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனிடையே, நேற்று முன்தினம் இரவு நண்பர் சரண் என்பவருடன் வீட்டின் அருகில் திலீப்குமார் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அவரது நண்பர்கள் திருநாவுக்கரசு மற்றும் சரவணன் (19) ஆகியோர் திலீப்குமாரிடம் சமாதானம் பேசுவதாக கூறி அங்குள்ள காலி இடத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து மறைத்து வைத்திருந்த கத்தியால் அவர்கள் இருவரும் திலீப்குமாரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக குத்தினர். இதனால் படுகாயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், திலீப்குமாருடன் உடன் இருந்த சரண் என்பவரையும் அவர்கள் கத்தியால் குத்தியதால் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தகவல் அறிந்த மல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், தப்பி ஓடிய திலீப்குமாரின் நண்பர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில், கொலையுண்ட திலீப்குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். பின்னர் அவர்களிடம் பிரேத பரிசோதனை செய்வதற்கு கையெழுத்து போடுமாறு போலீசார் தெரிவித்தனர். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திலீப்குமார் கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனவும்,, அதுவரைக்கும் மாணவரின் உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறி கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலுக்கு முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஆஸ்பத்திரி நுழைவு வாயிலில் இருந்த கதவுகளை மூடி அவர்களை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர். பிறகு அவர்கள் ஆஸ்பத்திரி வளாகத்திலேயே, கொலையாளிகளை கைது செய்யக்கோரி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி பிரேத பரிசோதனை அறை முன்பு அழைத்து சென்றனர்.

இதனிடையே, திலீப்குமார் கொலையில் தொடர்புடைய அவரது நண்பர்கள் திருநாவுக்கரசு, சரவணன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றிய தகவலை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சிலரை தேடி வருவதாகவும் கூறினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com