ஆசிரியர்கள் நியமிக்க கோரி கோடாலிகருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியை மாணவர்கள் முற்றுகை

போதிய அளவில் ஆசிரியர்களை நியமிக்க கோரி கோடாலிகருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியை மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ஆசிரியர்கள் நியமிக்க கோரி கோடாலிகருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியை மாணவர்கள் முற்றுகை
Published on

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோடாலிகருப்பூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 350-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும் இந்த பள்ளியில் தமிழ், கணிதம், ஆங்கிலம் போன்ற பாடங்களை நடத்த போதிய அளவில் ஆசிரியர்கள் இல்லை.

இதனால் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 ஆகிய வகுப்புகளை சேர்ந்த மாணவர்கள் பாடங்களை படிப்பதில் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து பள்ளி மாணவ-மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ-மாணவிகள் நேற்று காலை தங்களது வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பாக அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாணவ-மாணவிகளின் பெற்றோர் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் பள்ளியில் போதிய அளவில் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அவர்கள் முற்றுகை போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் வந்து பள்ளியில் ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து மாணவ-மாணவிகள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு தங்களது வகுப்புகளுக்கு சென்றனர். ஆசிரியர்பணியிடங்களை நிரப்பவில்லையென்றால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com