கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட ஷயான், மனோஜ் கேரளாவில் கைது

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட ஷயான், மனோஜ் ஆகியோரை தனிப்படை போலீசார் கேரளாவில் கைது செய்தனர்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட ஷயான், மனோஜ் கேரளாவில் கைது
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பிரகாஷ் கொலை செய்யப்பட்டதோடு, எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷயான், மனோஜ், மனோஜ்சாமி, திபு, ஜித்தின்ராய், உதயகுமார், சந்தோஷ்சாமி, சதீசன், சம்சீர் அலி, பிஜின் ஆகிய 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.

கடந்த மாதம் 8-ந் தேதி ஊட்டி கோர்ட்டில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு ஆஜராகாத ஷயான், மனோஜ் ஆகிய 2 பேருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி வடமலை உத்தரவிட்டார். தலைமறைவாக இருந்த அவர்கள் 2 பேரையும் கோத்தகிரி போலீசார் தனிப்படை அமைத்து சென்னை, பாலக்காடு, திருச்சூர், சொர்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் தேடி வந்தனர்.

இதற்கிடையே நீலகிரி மாவட்ட கலெக்டர் பரிந்துரையின்படி சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து ஷயான், மனோஜ் ஆகிய 2 பேரும் நாட்டை விட்டு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டது. இதற்கிடையில் ஷயான், மனோஜ் தரப்பில் ஜாமீன் வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் ஷயான், மனோஜ் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com