கோலார், சிக்பள்ளாப்பூர், ஹாசன் மாவட்டங்களில் முழுஅடைப்பு போராட்டம் அமைதியாக நடந்தது

கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை. பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
கோலார், சிக்பள்ளாப்பூர், ஹாசன் மாவட்டங்களில் முழுஅடைப்பு போராட்டம் அமைதியாக நடந்தது
Published on

கோலார் தங்கவயல்,

அகில இந்திய தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றும், இன்றும் (புதன்கிழமை) நாடு முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தன. அதன்படி நேற்று கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. போக்குவரத்து ஊழியர்கள் முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததால் மாநிலத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் இயங்கவில்லை.

இதேபோல, கோலார் மற்றும் சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களிலும் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. கோலார் மாவட்டத்தில் தனியார், அரசு பஸ்கள் ஓடவில்லை. பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், தபால் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.

போராட்டம்

கோலார் தங்கவயலில் மத்திய அரசுக்கு சொந்தமான பி.இ.எம்.எல். தாழிற்சாலையில் தாழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை. ஆனால் அதிகாரிகள் வழக்கமாக வேலைக்கு சென்றனர். கோலார் தங்கவயலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஊர்வலம் நடந்தது. தங்கவயல் தலைமை தபால் நிலையம் முன்பு தபால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோலார் டவுன் சீனிவாசாப்பூர் சர்க்கிளில் சிலர் டயர்களுக்கு தீவைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோலார் மாவட்டத்தில் பரும்பாலான ஆட்டோக்கள் வழக்கம்போல ஓடின. தமிழ்நாடு, ஆந்திரா அரசு பஸ்கள் கோலாருக்கு வரவில்லை.

அமைதியாக நடந்தது

இதேபோல சிக்பள்ளாப்பூர் மாவட்டத்திலும் முழுஅடைப்பையொட்டி பஸ்கள், ஆட்டோக்கள் எதுவும் ஓடவில்லை. பஸ்கள் ஓடாததால் ரெயில்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. முழு அடைப்பு போராட்டத்தையொட்டி கோலார் தங்கவயலில் போலீஸ் சூப்பிரண்டு லோகேஷ்குமார், கோலாரில் ரோகிணி கடோச், சிக்பள்ளாப்பூரில் கார்த்திக் ரெட்டி தலைமையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இன்றி முழுஅடைப்பு போராட்டம் அமைதியாக நடந்தது.

ஹாசன்

இதுபோல ஹாசன் மாவட்டத்திலும் நேற்று முழுஅடைப்பு போராட்டத்திற்கு தொழிற்சங்கத்தினர் அழைப்பு விடுத்து இருந்தனர். ஆனால் அந்த மாவட்டத்தில் அரசு பஸ்கள் ஓடவில்லை. தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், கார்கள் வழக்கம் போல இயங்கின. பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டன. ஹாசன் டவுன் ஹேமாவதி சர்க்கிள் பகுதியில் இருந்து தொழிற்சங்கத்தினர் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு கலெக்டர் ராகிணி சிந்தூரியை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்து விட்டு அமைதியான முறையில் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com