

கோவில்பட்டி,
கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலத்தில் இருந்து லாயல் மில் மேம்பாலம் வரையிலும் நாற்கர சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி சாலை விரிவாக்க பணிக்காக, கோவில்பட்டி மெயின் ரோடு பகுதியில் ஓடை புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து கோவில்பட்டி நகரசபை நிர்வாகத்தினர், ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த கடைகளை அகற்றி விட்டு, அந்த கடைகளுக்கு தீர்வை வரியை ரத்து செய்தனர்.
இதேபோன்று கோவில்பட்டி கோட்ட மின்வாரிய அலுவலகமும், தீர்வை ரத்து செய்யப்பட்ட கடைகளுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பா.ஜனதாவினர் நேற்று கோவில்பட்டி கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.