

அரியாங்குப்பம்,
புதுச்சேரியில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கியமான ஒன்றாக நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாம் உள்ளது. புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை சார்பில் இந்த படகு குழாம் நடத்தப்படுகிறது. புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சென்று படகு சவாரி செய்து மகிழ்வார்கள். இதன் மூலம் புதுச்சேரி அரசுக்கு வாரம் தோறும் பல லட்சக்கணக்கான ரூபாய் வருமானமாக கிடைத்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் சுண்ணாம்பாறு படகு குழாம் அருகே அரசு அனுமதியுடன் தனியார் படகு குழாம் அமைக்கப்பட்டது. இதனால் அரசு சுற்றுலாத் துறை மூலம் இயக்கப்படும் சுண்ணாம்பாறு படகு குழாமுக்கு சுற்றுலா பயணிகள் வருவது குறையும் என்றும், அதனால் வருமானம் பாதிக்கப்படும் என்றும்கூறி தனியார் படகு குழாம் அமைக்க சுற்றுலாத்துறை படகு குழாம் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஆனால் எதிர்ப்பையும் மீறி தனியார் படகு குழாம் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் தனியார் படகு குழாமுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சுண்ணாம்பாறு படகு குழாம் ஊழியர்கள் தங்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் படகு குழாம் நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் காரணமாக படகு குழாமில் படகுகள் எதுவும் இயக்கப்படவில்லை. அதனால் நேற்று சுண்ணாம்பாறு படகு குழாமுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். படகு குழாம் ஊழியர்களின் தொடர் போராட்டம் காரணமாக அரசு சுற்றுலாத்துறை கணிசமாக வருவாய் இழப்பை சந்தித்து வருவதாகவும், அதனால் இந்த பிரச்சினையில் அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலாத்துறை ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.