

ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனித வர்த்தக கடத்தல் மற்றும் கொத்தடிமை தொழிலை தடுத்து அதில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு பாதுகாக்கும் குழுவின் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் தலைமை தாங்கினர். போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா, சர்வதேச நீதிப்பணி இயக்குனர் மெர்லின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளர் நீதிபதி பிரீத்தா வரவேற்று பேசினார். நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ராமகிருஷ்ணன் திட்டம் குறித்து விளக்கி பேசினார். விழாவில் கலெக்டர் வீரராகவராவ் கலந்து கொண்டு மனித வர்த்தக கடத்தல் குறித்தும், கொத்தடிமைகள் குறித்தும், குழந்தை தொழிலாளர் குறித்தும் விளக்கி பேசினார்.
விழாவில் மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் பேசியதாவது:-
மனித கடத்தல் மற்றும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம் மனித கடத்தல், பாலியல் தொல்லைகள், கொத்தடிமை முறை ஆகியவற்றை தடுப்பது, பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது ஆகியவைதான். பாலியல் தொல்லை, கொத்தடிமை போன்றவற்றை தடுக்க வேண்டும். இதற்கு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சட்டப்பணிகள் குழுவின் மூலம் பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வு மேற்கொண்டு மாணவ பருவத்தில் இருந்தே இது குறித்து விளக்கி கூறி வருகிறோம்.
இதற்கென தற்போது மாவட்ட சட்டப்பணிகள் செயலாளர் தலைமையில் மனித வர்த்தக கடத்தல் மற்றும் கொத்தடிமை தொழிலை தடுத்து அதில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மறுவாழ்வு அளிப்பதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் மேற்கண்ட பணிகளை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்வார்கள்.
சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளாகியும் மனித கடத்தலும், கொத்தடிமை தொழிலும் இருக்கிறது என்றால் நாம் அனைவரும் வருத்தமடைய வேண்டும். மக்களிடையே போதிய கல்வி அறிவும் விழிப்புணர்வும் இல்லாததே கொத்தடிமை, மனித வர்த்தக கடத்தலுக்கு முக்கிய காரணம்.
இவ்வாறு அவர் பேசினார்.