மது குடிக்க பணம் கொடுக்காததால் மனைவியை கொலை செய்த, கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

பல்லடம் அருகே மது குடிக்க பணம் கொடுக்காததால் மனைவியை குத்திக்கொலை செய்த கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.
மது குடிக்க பணம் கொடுக்காததால் மனைவியை கொலை செய்த, கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
Published on

திருப்பூர்,

பல்லடம் டி. வடுகபாளையம் குமரன்நகரை சேர்ந்தவர் முருகேசன்(வயது 43). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ரஞ்சிதா(27).

முருகேசனுக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் குடிப்பதற்கு தனது மனைவியிடம் பணம் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடந்த 13-7-2012 அன்று மாலை வீட்டில் முருகேசனும், ரஞ்சிதாவும் இருந்துள்ளனர். அப்போது மது குடிப்பதற்கு மனைவியிடம் முருகேசன் பணம் கேட்டுள்ளார். பணம் கொடுக்க மறுக்கவே அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் கோபமடைந்த முருகேசன் மனைவியை அடித்து உதைத்ததுடன் வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து ரஞ்சிதாவை சரமாரியாக குத்திக்கொலை செய்தார். இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மறுநாள் முருகேசனை கைது செய்தனர்.

இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, மனைவியை குத்திக்கொலை செய்த முருகேசனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் பரிமளா ஆஜராகி வாதாடினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com