

சிவகங்கை,
சிவகங்கை வட்டார வளமையத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் சார்பில் சிவகங்கை ஒன்றியத்திற்குட்பட்ட 71 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது. முதன்மைக்கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர்(பொறுப்பு) கந்தவேல் வரவேற்று பேசினார். விழாவில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு மடிக்கணினிகளை, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் முதன்மைக்கல்வி அலுவலர் பாலுமுத்து வழங்கினார். அதன்பிறகு அவர் பேசியதாவது:-
பள்ளிக்கல்வித் துறையின் அனைத்து செயல்பாடுகளையும் உடனுக்குடன் துரிதமாக இணையவழியில் செயல்படுத்திட மடிக்கணினிகள் வழங்கபட்டுள்ளது. மேலும் இன்றைய உலகளாவிய மின்னணு கருவிகள் மற்றும் மென்பொருட்களை பயன்படுத்தி கற்பிக்கும் திறன் மேம்பாட்டினை அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெற வேண்டும். இத்துடன் தங்களிடம் பயிலும் மாணவர்களையும் இந்த மின்னணு உலகியலோடு பயணிக்கும் வகையில் அழைத்து செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விழாவில் சிவகங்கை மாவட்டக்கல்வி அலுவலர் ராஜேந்திரன் சிவகங்கை வட்டார கல்வி அலுவலர்கள் பால்ராஜ், லதா, ஜஸ்டின் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய அலுவலர்கள், கணிணி வழி கற்றல் வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் செய்திருந்தனர்.