மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; வாலிபர் பலி போலீசார் விசாரணை

விராலிமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; வாலிபர் பலி போலீசார் விசாரணை
Published on

விராலிமலை,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள பூதக்குடியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் மணிகண்டன்(வயது 19). இவர் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று இரவு மணிகண்டன் வழக்கம்போல் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். விராலிமலை அருகே குறிச்சிப்பட்டி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற பஸ்சை மணிகண்டன் முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் விராலிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் தலைமையிலான போலீசார் வந்தனர். பின்னர் மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com